Posts tagged ‘sakthi vikatan’

December 4, 2011

வெள்ளிச் சொம்பில்… குங்குமப் பிரசாதம்!

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திப்பிராஜபுரம். அழகிய இந்த கிராமத்தின் சிறப்பு- அக்ரஹாரம். வேத பாடசாலையும் அமைந்துள்ள இந்த கிராமத்தில், வேத விற்பன்னர் கள் மற்றும் சாஸ்திர பண்டிதர்கள் ஆகியோர் வாழ்ந்தனர்.
கட்டுக் குடுமியும் கழுத்தில் ருத்திராட்சமுமாக மாணவச் சிறுவர்கள் பலர் இங்கும் அங்குமாக ஓடியாடி விளையாடுவதே அத்தனை அழகு! அது மட்டுமா? அக்ரஹார வீட்டு வாசல்களில்… காலை- மாலை இரண்டு வேளையும் காவிக் கோலங்கள் நிறைந்திருக்கும். அக்ரஹாரப் பெண்கள், தீபமேற்றி சுலோகங்களைப் பாடுவர். இதே போல் திருவிசநல்லூர், திருவிடைமருதூர், கோவிந்தபுரம் ஆகியவையும் அழகு தவழும் கிராமங்கள். காஞ்சி மகா பெரியவாள் இந்த கிராமங்களை பெரிதும் நேசித்தார்.

ஒருமுறை, திப்பிராஜபுரத்தில் முகா மிட்டிருந்தார் பெரியவாள். இந்த கிராமத்து மக்கள், மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தனர். ஒரு நாள்… ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, மேனாவில் (பல்லக்கு) வீதியுலா வந்தார் காஞ்சி பெரியவாள். வழிநெடுக வாழைமரமும் மாவிலைத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. வீடுகள் தோறும் வாயிலில் கோலமிட்டு, தீபமேற்றி வைத்திருந்தனர்.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மேனா நின்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை முழங்கினர்; பூர்ண கும்பத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார் பெரியவாள். அனைவரும் அவரை நமஸ்கரித்தனர்.

மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது மேனா. இந்த நிலையில்… தனவந்தர் ஒருவர், தனது வீட்டில் பரபரப்பும் பதட்டமுமாக இருந்தார். ‘பெரியவாளை தரிசிக்க வேண்டும்’ என்று எண்ணி, பூர்ண கும்பத்துக்காக பெட்டிக்குள் வைத்திருந்த வெள்ளிச் சொம்பை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாலும் ‘ஊரே கூடியிருக்கும் இந்த வேளையில் வாசலுக்கு வந்து பெரியவாளை தரிசிக்க வேண்டுமா?’ என்று சிந்தித்தபடி தவித்து மருகினார்.

அவரது வீட்டு வாசலின் முன் நின்றது மேனா. வீட்டுக்குள் இருந்து தயக்கத்துடன் எட்டிப் பார்த்த தனவந்தரைப் பார்த்து, ‘வா இங்கே…’ என்பது போல் சைகை காட்டினார் பெரியவாள்!

பதறிப் போன தனவந்தர், கையில் வைத்திருந்த வெள்ளிச் சொம்புடன், ஓடி வந்தார். பெரியவாளை நெருங்கி பவ்யமாக நின்றார். அவரின் கையிலிருந்த சொம்பை ‘வெடுக்’கென பிடுங்கினார் பெரியவாள்.

தனவந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இந்த சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லையே…’ எனும் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி தலை கவிழ்ந்து நின்றார் தனவந்தர்.

பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம் வழங்கி, ”«க்ஷமமா இரு” என்று ஆசிர்வதித்தார்.

உடனே பெரியவாளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார் தனவந்தர். அவரால் பேசவே முடியவில்லை. பொலபொலவென கண்ணில் நீர் பெருகிற்று. சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தனவந்தர், ‘குரு மகா தெய்வமே…’ என்று பேச முற்பட்டார். ஆனால், மெல்லிய புன்னகையுடன், ‘போகலாம்’ என்பது போல் சைகை காட்டினார் மகா பெரியவாள். மேனா நகர்ந்தது.

ஊர் மக்களுக்கு ஆச்சரியம்! ‘அட… பக்தி சிரத்தையுடன் எல்லோரும் பூரணகும்பம் அளித்தபோது, அவற்றைத் தொட்டு மட்டுமே ஆசீர்வதித்த பெரியவாள், இந்த தனவந்தருக்கு மட்டும் குங்குமம் கொடுத்து ஆசீர்வதிக்கிறாரே? பரவாயில்லை… தனவந்தர் அதிர்ஷ்டசாலிதான்’ என்று பேசிக் கொண்டனர்.

உண்மைதான்! சீரும் சிறப்புமாக வாழ்ந்த தனவந்தர், சமீபத்தில் நொடித்துப் போய் விட… இதையடுத்து வெளியே வருவதும் இல்லை; எவரையும் சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். அவமானத்தால் வீட்டிலேயே அடை பட்டுக் கிடந்தார். அதனால்தான் பெரியவாள் வீதியுலா வந்தபோதும் வெளியே வர தயங்கினார் தனவந்தர்.

இதை உணராமலா இருப்பார் பெரியவாள்? அந்த தனவந்தர் வாழ்ந்து கெட்டவர் என்பதை அறிந்தவர், வீதியுலாவின் போது அவரை அழைத்து, அவர் கையில் இருந்த சொம்பில் குங்குமத்தையும் வழங்கி அருள் புரிந்தார்.

சில மாதங்களில்… தனவந்தரின் குடும்பம் மெள்ள முன்னேறியது. படிப்படியாக செல்வம் சேர… மீண்டும் தழைத்தோங்கியது தனவந்தரின் குடும்பம். பழைய நிலையை விட இன்னும் பல படி முன்னேறினார்!

இதையறிந்த திப்பிராஜபுரம் மக்களுக்கு பெரியவாள் மீது இருந்த பக்தியும் அன்பும் பல மடங்கு அதிகரித்தது.

December 4, 2011

Helping the stranger

தினம் தினம் திருநாளே!

ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மடத்துக்கு வந்து சேர்ந்த புதிது.

ஒரு முறை, காஞ்சி பரமாச் சார்ய ஸ்வாமிகளும், ஜயேந்திரரும் புதுக்கோட்டையை அடுத்துள்ள இளையாற்றங்குடி எனும் கிராமத்தில் தங்கியிருந்தனர்.

பரமாச்சார்யாளின் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களையும் ஜயேந்திரரே செய்வது வழக்கம். ஜயேந்திரருக்கு நியாய சாஸ்திரம் விஷயமாகச் சொல்வதற்கு ஆந்திராவில் இருந்து மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி என்ற பண்டிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.

மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி, வித்வான் மட்டுமல்ல; பரம்பரை தனவந்தரும்கூட. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் ஏறினார். அவர், திருமயம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து இளையாற்றங்குடிக்குச் செல்ல வேண்டும்.

ஆனால், வேங்கடேச சாஸ்திரிக்குத் தமிழ் தெரியாது. சாஸ்திரிகள் பயணித்த அதே பெட்டியில் வைதீக ஆசாரத்துடன் கூடிய வேறு ஒருவரும் பயணித்தார். அவரைக் கண்டதும், ‘இவரும் இளையாற்றங்குடி மடத்துக் குத்தான் செல்கிறார் போலும்!’ என்று எண்ணிய வேங்கடேச சாஸ்திரி மெள்ள அவரை அணுகி, வட மொழி யில் பேச ஆரம்பித்தார்.

இளையாற்றங்குடியில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் தங்கியிருப் பது பற்றியும் பெரியவாளின் அழைப்பின் பேரில், தான் அங்கு செல்வதையும் விவரித்தார்.அத்துடன், ”தமிழ் மொழியோ… தமிழகத்தில் உள்ள ஊர்களைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. தாங்கள் உதவ வேண்டும்!” என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், அந்த வைதீக- ஆசார ஆசாமி, தனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாகக் கூறியது டன், வேறு ஓர் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். இதைக் கண்டு, மேலும் பேச்சை வளர்க்கவோ, தனக்கு உதவவோ அந்த ஆசாமிக்கு விருப்பம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி.

இதையடுத்து, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பெயர்ப் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருப் பதைப் படித்து, அந்தந்த ஊர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி. திருமயம் ரயில் நிலையம் வந்ததும் அங்கு இறங்கிக் கொண்டவர், ஒருவழியாக இளையாற்றங்குடிக்கு வந்து சேர்ந்தார்.

ஸ்ரீமடத்துக்கு வந்த வேங்கடேச சாஸ்திரிக்கு அதிர்ச்சி! ரயிலில் பயணித்த அதே வைதீக- ஆசார ஆசாமியும் அங்கு இருந்தார். மடத்தில் இருந்தவர்களிடம் அந்த ஆசாமியைச் சுட்டிக்காட்டி வேங்கடேச சாஸ்திரி விசாரித்தபோது, ”இவர் ஸ்ரீமடத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்” என்று தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி மிகவும் வேதனை அடைந் தார். ‘இவரிடம் பொன்- பொருளா கேட்டோம். வாய் மொழியாக ஒரு உதவிதானே கேட்டோம். மடத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவர், இப்படி இருக்கிறாரே!’ என்று வருந்தினார் வேங்கடேச சாஸ்திரி.

அவரின் முக வாட்டத்தைக் கண்டவர்கள், அதற்கான காரணத்தைக் கேட்டனர். சாஸ்திரியும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை மன வருத்தத்தோடு விவரித்தார். உடனே அங்கிருந்த ஒருவர், வேங்கடேச சாஸ்திரியை அழைத்துக் கொண்டு, நேரே மகா பெரியவாளிடம் சென்றார்.

அப்போது, மகா பெரியவாள் அங்குள்ள குளத்தில் இறங்கி நீராட தயாராகிக் கொண் டிருந்தார். அவருடன் மடத்து ஆட்களும் பக்தர்கள் பலரும் இருந்தனர். இவர் களைக் கண்டதும் ‘என்ன விஷயம்?’ என்பது போல் பார்த்தார் மகா பெரியவாள்.

‘இத்தனை பேர் இருக்கும்போது எப்படிச் சொல்வது’ என்று இரு வரும் தயங்கி நின்றனர். ஆனால் பெரியவா விடவில்லை. வந்த விஷயத்தைச் சொல்லும்படி வலியுறுத்தினார். வேறு வழி யின்றி, அனைத்தையும் விவரித் தார், சாஸ்திரியைக் கூட்டி வந்தவர்.

இதைக் கேட்டதும் மகா பெரியவாளின் முகம் மலர்ந்தது. ”புகார் புரிகிறது. நமது மடத்துக்கு நம் அழைப்பின் பேரில் பாடம் சொல்ல வந்திருப்பவர் இவர். இவருக்கு, நமது மடத்தில் முக்கிய பதவியில் உள்ள ஒருவரே உதவ மறுத்துட்டார் என்பதுதானே வருத்தம்? இந்தச் சிறு உதவியைக்கூட செய்ய மனசில்லாமல், இவ்வளவு மோசமானவராக இருக்கிறாரே என்றுதானே நினைக்கிறாய்? ஆனால், எனக்கு என்னவோ… அவரைப் போல நல்லவரே இல்லை என்றுதான் தோன்றுகிறது” என்று சொல்லி நிறுத்தினார் மகா பெரியவாள்.

இதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி, புகார் தெரிவித்த ஆசாமி உள்ளிட்ட அனைவரும் எதுவும் புரியாமல் மகா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவரோ புன்னகைத்தபடி, ”வேறொண்ணுமில்லே… நம்ம பண்டிதரை (வேங்கடேச சாஸ்திரி) வேறு ஒரு ரயில் நிலையத்தில், ‘இதுதான் திருமயம்’ என்று இறக்கி விடாமல், ‘எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா?” என்றார் மகா பெரியவாள்.

இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கண்களில் நீர் மல்க, மகா பெரியவாளை நமஸ்கரித்தனர். ‘இது போல் உலகத்தைப் பார்க் கிற பக்குவத்தை எங்களுக்கும் அருளுங்கள்’ என்று வேண்டினர்.

இதுபோல நாமும், எல்லோரையும்- எல்லாவற்றையும்… நல்லவர்களாக- நல்லவை யாகவே பார்க்கக் கற்றுக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான் இல்லையா?

December 3, 2011

Importance of Sumangali Puja

கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை. இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய வேண்டும் என்பது காஞ்சிப்பெரியவரின் விருப்பம்.

ஒரு சந்தர்ப்பத்தில் வயதான தம்பதியர், தட்டில் பழம், பூ, அம்பாளுக்கு பட்டுப் புடவை, ரவிக்கையோடு பெரியவரைக் காண காஞ்சிபுரம் வந்திருந்தார்கள். மாயவரத்தில் இருந்து வந்த அவர்களிடம், “”காவிரிக்கரையில் இருந்து வரும் நீங்கள் துலா ஸ்நானம் (ஐப்பசி மாதம் காவிரியில் நடக்கும் தீர்த்த நீராடல்)செய்து விட்டீர்களா?” என்று கேட்டார்.

தம்பதிகள் இருவரும்,””ஆமாம்! சுவாமி! துலாஸ்நானம் ஆயிடுச்சு!” என்றனர்.

பெரியவர் அடுத்த கேள்வியாக,””மாயவரம் ஆற்றங்கரைக்கு துலாஸ்நானம் செய்ய ஏகபட்ட சுமங்கலிகள் வருவாளே!” என்றார்.

“”வருவா” என்றனர் அவர்கள்.

“”அது சரி! உங்க அகத்திலே சுமங்கலிப் பிரார்த்தனைஎல்லாம் ஒழுங்கா நடக்கிறதா?” என்று பெரியவர் கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் தம்பதியர் முகம் வாடினர்.

“”முன்பெல்லாம் ஒழுங்காக நடந்தது. இப்போ சுமங்கலி பிரார்த்தனை நடந்து பல வருஷமாச்சு!” என்று சொல்லி அந்த அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அந்த அம்மாளின் கணவர் மனைவியை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தினார். பெரியவரிடம்,””சுவாமி! என்னோட கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண். ஒரே ஒரு பெண். அவளும் மூன்று வருஷத்திற்கு முன் இறந்துவிட்டாள். அதற்கு முன்பே சுமங்கலி பிரார்த்தனையை நடத்தாமல் விட்டுவிட்டோம். இப்போ எங்கள் குடும்பத்தில் வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. ஆனா, குடும்பத்தில் யாருக்கும் சுகமோ, மனநிம்மதியோ இல்லை. என் ஐந்து வயது பேரனுக்கு பேச்சு வரவில்லை. என் மூத்த நாட்டுப்பொண்ணுக்கோ (மருமகள்) ரத்தப் புற்றுநோய். மனநிம்மதி வேண்டியே உங்களைத் தரிசிக்க வந்தோம்,”என்று சொல்லி முடித்தார்.

சற்றுநேரம் மவுனம் காத்த பெரியவர், “”இப்போ என் முன் வைத்திருக்கும் பழம், பூ தான் உங்களுக்கு கொடுக்கும் பிரசாதம். கொண்டு வந்த பட்டுப்புடவையை மூத்த நாட்டுப் பொண்ணுக்கு கொடுத்து கட்டிக்கச் சொல்லுங்க! இனிமேல் பட்டுப்புடவையே வேண்டாம். அது நல்லதல்ல. அது ஒண்ணும் உசத்தியானது
கிடையாது. ஆடம்பரம் நமக்கு எதுக்கு? குலதெய்வத்திற்கு கொண்டு வந்த பூவைப் போடுங்கோ. அதோடு முக்கியமான ஒரு காரியமும் செய்ய வேணும்,”என்று சொல்லி பெரியவர் பேச்சை நிறுத்தினார்.
கேட்டுக் கொண்டிருந்த தம்பதியர் வணங்கி, “”பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் அதை அப்படியே செய்றோம்” என்று கண் கலங்கினர்.

“”உன் சகோதரியின் நினைவுநாளில் 108 சுமங்கலிகளுக்கு சாதாரண நூல் புடவை, ரவிக்கை, மங்கல திரவியங்கள் கொடுப்பதோடு, முடிஞ்சா அன்னதானமும் செய்யவேண்டும். அதன்பிறகு எல்லாம் நன்மையாகவே முடியும்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார். தம்பதிகள் பெரியவரின் உத்தரவுபடியே சுமங்கலி பூஜையைச் செய்தனர். மூன்று ஆண்டுகளில் பேரனும் பேசத்தொடங்கி விட்டான். மூத்த மருமகளும் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணம் பெற்றார். பெரியவரின் வழிகாட்டுதலால் அக்குடும்பத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.

December 3, 2011

Sri Bodendra Swami Adishtanam

December 3, 2011

Saving the bhaktas

December 3, 2011

Sherasdhar

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள உத்திரகோசமங்கை ஸ்ரீமங்களநாதர் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு அன்பர் ஒருவரை சந்தித்தேன். அப்போது தன்னுடைய தந்தைக்கு, காஞ்சிப் பெரியவர் அருளிய… நெகிழ வைக்கும் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அன்பரின் தந்தை, சென்னை நீதிமன்றத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தவர். அப்போது காஞ்சிப் பெரியவர், சென்னை நகரில் முகாமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் அன்பரின் தந்தையும் பங்கேற்று சேவை புரிந்தாராம். அன்பரின் தந்தை ஓடியாடி உழைத்த விதத்தை காஞ்சி பெரியவாள் நேரில் கண்டார்.

முகாம் நிறைவுறும் நாள் வந்தது. அன்றைய தினம், அன்பரின் தந்தையைக் கரிசனத்துடன் அழைத்த பெரியவாள், ”எங்கே வேலை பாக்கறே?” என்று கேட்டிருக்கிறார்.

”கோர்ட்ல கிளார்க்கா வேலை பாத்துண்டி ருக்கேன்” என்று பவ்யமாக பதில் அளித்தாராம் அன்பரின் தந்தை.

உடனே பெரியவாள், ”இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?” என்று கேட்க… ”ஷெராஸ்தார்” என்று பதிலளித்திருக்கிறார் இவர்.

இதையடுத்து பெரியவாள், ”நீ ஷெராஸ்தார் ஆயிடுவே” என்று ஆசீர்வதித்திருக்கிறார்.

சாதாரண கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஷெராஸ்தார் பொறுப்புக்கு வருவதற்குக் கல்வி உள்ளிட்ட தகுதிகள் அவசியம். ஆனால் இந்த அன்பரின் தந்தைக்குக் கல்வித் தகுதி மட்டும் இல்லை. எனவே, ‘இந்தப் பதவி சாத்தியமே இல்லை’ என்று தீர்மானித்து, காஞ்சிப் பெரியவாளின் ஆசியை அடுத்த கணத்தில் இருந்து மறந்தே போனார்.

இதையடுத்து ஒரு சில நாட்களில் டெல்லியில் இருந்து தலைமை நீதிபதி சென்னைக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான பணிவிடைகளை சிறப்பாகச் செய்து கொடுத்தாராம் அன்பரின் தந்தை.

சில நாட்கள் கழித்து, வேலை முடிந்து தலைமை நீதிபதி டெல்லிக்குக் கிளம்பிச் செல்லும்போது, நீதிமன்ற அலுவலகக் குறிப்பேட்டில், ‘இந்த கிளார்க்கின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர் இவர்’ என்று பரிந்துரை செய்திருந்தாராம்!

பிறகென்ன? உரிய நேரத்தில் அந்தப் பரிந்துரை உயரதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, அன்பரின் தந்தைக்கு ஷெராஸ்தார் எனும் பதவி உயர்வு கிடைத்ததாம்.

சில வருடங்களுக்குப் பின், காஞ்சிப் பெரியவர் மீண்டும் சென்னை வர… அன்பரின் தந்தை அந்த முகாமுக்குச் சென்று பெரியவாளை தரிசித்து வணங்கியிருக்கிறார்.

”என்ன… ஷெராஸ்தாரர் ஆயாச்சா?” என்று மெள்ள புன்னகைத்தபடியே பெரியவாள் கேட்டதும், அந்த நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து போனாராம் அன்பரின் தந்தை!

December 3, 2011

Palghat Mani Iyer

December 3, 2011

Om Namashivaya

காஞ்சிப்பெரியவரைச் சந்திக்க ஒரு தனவணிகர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவரது குடும்பம் நல்ல செல்வச்செழிப்புடன் இருந்தது. வணிகரின் முன்னோர் தானதர்மம் செய்து வாழ்ந்தவர்கள். தங்கள் ஊரில் சிவன்கோயில் ஒன்றைக்கட்டி நித்யபூஜைக்காக நிலபுலன்களை எழுதி வைத்திருந்தனர். ஆனால், வணிகரோ இஷ்டம் போல ஆடம்பரமாய் வாழ்ந்து சொத்துக்களை விற்றுத் தீர்த்துவிட்டார். அவருடைய உடல்நிலையும் பாதிப்புக்குள்ளானது. அவரது மகனுக்கு குழந்தையும் இல்லாமல் போனது. அதை எண்ணி வருந்தியபடியே காஞ்சிப் பெரியவர் முன் வந்து நின்றார். அவர் சுவாமிகள் அவருடைய பேச்சைக் கேட்டபடியே, மற்ற பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

சிறிதுநேரம் மவுனம் காத்த பெரியவர், “”உங்கள் குடும்பவழியில் ஒரு சிவன் கோயில் இருக்குமே?” என்று சுவாமிகள் கேட்டார். “”ஆமாம்! சுவாமி! சிவன் கோயில் இருந்தது. ஆனால் இப்போது அக்கோயிலை நாங்கள் கவனிப்பதில்லை,” என்று சற்று தயக்கத்துடன் கூறினார். ””அப்படியா! சிவனுக்காக விடப்பட்ட சொத்தை நீ எடுத்துட்டே! அதனால தான் நீ இப்போ வாரிசு கூட இல்லாமல் தத்தளிக்கிறே! இதுக்கு என்னால என்ன செய்ய முடியும்?” என்று அவருடைய தவறைச் சுட்டிக்காட்டினார்.

தனவணிகர் பெரியவரிடம்,””சுவாமி! எங்க குடும்பம் நல்ல பாரம்பரியமான குடும்பந்தான்! சிவனுக்காக எங்கள் முன்னோர் பல சேவைகளை பெரும் செலவில் செஞ்சிருக்காங்க. ஆனால், இப்போ பரம்பரைச் சொத்து ஒன்றும் என்னிடத்தில் இல்லை. எல்லாம் என் கையை விட்டுப் போய் விட்டது. சிவன் கோயிலையும் மறந்துட்டேன்,” என்றார் உருக்கமாக. அவரையும் அறியாமல் அவர் கண்களில் கண்ணீர் பெருகியது.

“”நீ இப்போ சொல்றது பெரிய தப்பு. உங்க வீட்டுப் பெரியவங்க காலையில் குளிச்சா நெற்றியில் திருநீறிட்டு “நமசிவாய’ என்று மந்திரம் சொல்லி சிவவழிபாடு செய்தவர்கள். அந்தச்சொத்து எந்தக் காலத்திலும் உனக்கும் பலன் கொடுக்கும். நீ அந்த மந்திரத்தை விடாமல் ஒருநாளைக்கு ஆயிரம் தரம் ஜபம் செய். எல்லாம் சரியாகிவிடும்,” என்று சொல்லி மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்து பிரசாதம் கொடுத்தார்.

தனவணிகரும் விடாமல் சிவபூஜையில் ஈடுபட்டு வந்தார். மூன்றாண்டுகள் தொடர்ந்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்துவந்தார். அவருடைய நோய் தீர்ந்தது.

மகனுக்கு ஒரு ஆண்பிள்ளையும் பிறந்தது. பிள்ளைக்கு “”நமச்சிவாயம்” என்று பெயரிட்டார் தனவணிகர். பண்புள்ள குழந்தையாக வளர்ந்த நமச்சிவாயம் படித்து டில்லியில் மத்திய அரசுப்பணியில் பணியாற்றி வந்தார்.

நமச்சிவாயமும் தங்கள் குலசொத்தான சிவனுக்கு பூஜை செய்ய மறந்ததில்லை. இப்போது நம்நாட்டின் சார்பாக இங்கிலாந்தில் அவர் பணியாற்றுகிறார். துன்பத்தின் விளிம்பில் இருந்த தனவணிகர் குடும்பம் மீண்டும் தழைக்க காஞ்சிப்பெரியவரின் வழிகாட்டுதலே தக்க துணையாய் அமைந்தது.

 

Smt Mangaiyarkarasi, a Tamil Professor, was speaking on the glory of Sakti Panchakshari MahaMantram to a big audience somewhere that was telecast last week in Vijay TV.

She was mentioning about Appar (Tirunavukkarasar) Swamigal’s absolute faith in the efficacy of ‘NamaSivaya’ which came to his rescue to float him on the waters. You may recall this happened when the Jain King sought to punish him by tying him on a big stone and throwing him in the deep water to make sure he would drown.

She recalled a comparatively recent event from our Maha Periyava’s life. A few devotees built a temple for Lord Siva somewhere in Andhra. When they tried to carry the sculpted Linga made of stone to the sanctum,they could not move IT even an inch. Anxiety writ large on their faces,they came to report the matter to Maha Periyava. After a few minutes’ pause, Maha Periyava. asked them to bring one Sri Vaidyanatha Sastri from somewhere near Trichy. Maha Periyava whispered something into his ears and advised the Andhra devotees to take him along with them to their town.

On reaching their place, Sri Sastrigal was doing Japa for hours together after his daily anushtanams. The devotees were perplexed as they expected this Sastrigal to advise them something useful to allay their predicament. Nonetheless, they
just kept and did not disturb Sri Sastrigal.
On the 21st day of his stay there, after his Japa, Sri Sastrigal asked them to shift the Lingam. Lo ! They were able to do it in no time!

They told Sri Sastrigal that the Lingam which earlier weighed so much not allowing them to move IT by even an inch was now like a mass of cotton, so light and easy to move.

They requested him to explain the miracle to them. Sri Sastrigal told them he too did not know,except that Maha Periyava asked him to do the Panchakshara Japam for 21days devotedly,sitting in front of that Lingam, -that’s all!

Prof Mangaiyarkarasi said Maha Periyava with His Tapomahima could demonstrate in the 20th Century what Appar Swamigal did centuries ago to prove the efficacy of Siva Panchaksharam!

December 3, 2011

Musiri Devotee – One of my favorites

December 3, 2011

Moksha for Purandaradasalu

December 3, 2011

Madathu Bayilwan

ஒரு சமயம் பயில்வான் ஒருவர் காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க வரவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தார். ஒரு பிடி எள்ளை அவரிடம் கொடுத்தால், அதை எண்ணெய்யாக்கி விடும் அளவுக்கு பலசாலி. காஞ்சிப்பெரியவரின் முன்னிலையில் தன் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. தன்னை விட வேறு திறமையான பயில்வான் இல்லை என்று அவர் கர்வமும் கொண்டிருந்தார். விஷயத்தை அறிந்த காஞ்சிப்பெரியவர் அவருக்கு தகுந்த பாடம் புகட்ட எண்ணினார்.
மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகள் என்ற பக்தர் காஞ்சி மடத்திற்கு அடிக்கடி வந்து சொல்லக் கூடியவர். நல்ல உடற்கட்டும், உயரமும் கொண்ட சாஸ்திரிகள் பார்ப்பதற்கு பயில்வான் போலவே காட்சி தருவார். அவரை அழைத்த சுவாமிகள், “”இன்று முழுவதும் ஸ்ரீமடத்து வாசலிலேயே நிற்க வேண்டும்,” என்று சாஸ்திரிகளுக்கு உத்தரவிட்டார். பெரியவரின் உத்தரவைக் கேட்ட சாஸ்திரிகளும், மற்ற மடத்து தொண்டர்களும் புரியாமல் விழித்தனர். இருந்தாலும், பெரியவரின் கட்டளைக்கு பணிந்து அன்று முழுவதும் சாஸ்திரிகள் வாசலிலேயே கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். அன்றைய தினம் வருவதாகச் சொல்லியிருந்த பயில்வான் மடத்திற்கு வரவே இல்லை. மாலை நேரமும் வந்து விட்டது. பயில்வானின் நண்பர் ஒருவர் மெதுவாக மடத்திற்குள் நுழைந்தார்.

அவர் மடத்திலிருந்த சிஷ்யர்களிடம், “” வேதபண்டிதர்கள் மட்டும் தான் மடத்தில் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், மடத்து வாசலிலே பயில்வான்களும் இருப்பார்கள் என்பதை இன்று நேரிலேயே பார்க்கிறேன்,” என்றவர், இன்னொரு தகவலையும் சிஷ்யர்களிடம் சொன்னார்.
“இன்று பெரியவரைப் பார்ப்பதற்கு வருவதாகச் சொன்னாரே பயில்வான்! அவரும் நானும் ஒன்றாகத்தான் வந்தோம். மடத்து வாசலுக்கு வந்ததும், அங்கே ஒரு பயில்வான் நிற்பதைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. என்னை மட்டும் உள்ளே அனுப்பி விட்டு அவர் ஏதோ ஒரு பயத்துடன் ஓடியே விட்டார்,” என்றார். இதனைக் கேட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்ததோடு, சுவாமிகளிடமும் இதைத் தெரிவித்தனர். அன்றுமுதல் மணக்கால் கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு “ஸ்ரீமடத்து பயில்வான் ‘ என்ற பெயரே நிலைத்துவிட்டது. இன்னொரு அற்புதத்தையும் பெரியவர் செய்தார்.

December 3, 2011

Lighter Side of Periyava

நமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ ஒரு சின்ன உதாரணம்.

ஒருமுறை ஸ்வாமிகள் மஹாரஷ்ராவில் ஒரு கிராமத்தின் சாலையோரம் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக நான்கு பேர்கள் ஒரு யானையின் மீது ஏறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் அவர்களைப்பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள். ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்து” யார் நீங்கள்? யானையின்மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள்?”என்று வினவினார்.

அவர்களும் பவ்யமாக “ஸ்வாமிகளே நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தராக இருந்தோம். எங்கள் தகப்பனார் எல்லாவற்றையும் தானம் தருமம் செய்து பின்னர் எஞ்சிய யானையை எங்களுக்கு அளித்து அதன் மூலம் பிழைத்துக்கொள்ளச் சொன்னார். நாங்களும் அதன் மீது ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வோம்.பக்திப்பாடல்கள் பாடுவோம்,புராணக் கதைகளைச் சொல்லுவோம். எங்களுக்கும் பொருள் கிடைக்கும் யானைக்கும் தீனி கிடைக்கும் இப்படி எங்கள் ஜீவன்ம் செல்லுகிறது என்றார்கள்.

அதற்கு ஆசார்ய ஸ்வாமிகள் புன்சிரிப்புடன் கூறினார்” இங்கேயும் இதான் நடக்கிறது. இவா என்னை யானை மாதிரி ஊர் ஊராக அழைத்து கொண்டு செல்கிறார்கள். நானும் அங்கே அங்கே போய் உபன்யாஸம் செய்கிறேன் ஸ்லோகங்களைப் பாடுகிறேன். போற இடத்தில இவாளுக்கும் சாப்பாடு பணம் எல்லாம் கிடைக்கிறது. எனக்கும் பூஜை செய்ய இடம் பக்தர்கள் எல்லாம் கிடைக்கிறது. நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்”‘ என்றார் மாஹாஸ்வாமிகள். கூடியிருந்த பக்தர்கள் ஸ்வாமியின் நகைச்சுவை உணர்ச்சியையும் பக்தர்களை தனக்கு சாமானமாக பாவிக்கும் உயர்ந்த உள்ளத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்கள்

December 3, 2011

Periyava’s prasadam to Justice Ismail

மஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாதை உண்டு.அதேமாதிரி மற்ற மதத்தினரும் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை.கீழே உள்ள வீடியோ பதிவில் அவர் சமாதியான அன்று மரியாதை செலுத்த வந்தவர்களில் சில இஸ்லாமிய சகோதரர்களையும் பார்க்கலாம். ஒருமுறை சிறந்த இலக்கியவாதியும், கம்பன் கழகத்தின் தலைமை பொறுப்பிலிருந்த திரு.நீதியரசர் இஸ்மயில் அவர்கள் பெரியவர்களைப் பார்க்க வந்தார். இருவருக்கும் இடையே இலக்கிய விஷயங்களைப் பற்றியும் கம்பராமாயணத்தைப் பற்றியும் விவாதம் வெகு நேரம் நடந்து கொண்டு இருந்தது. மடத்திலிருந்த எல்லோருக்கும் ஸவாமிகள் நீதியரசருக்கு என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் என்ற எண்ணமே மிகுதியாக இருந்தது. இந்துக்களுக்கெல்லாம் விபூதி குங்குமம் வழங்கலாம். ஆனால் இந்த இஸலாமிய பெரியவருக்கு என்ன கொடுப்பார்?

விவாதம் முடிந்து நீதியரசர் விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது. ஸ்வாமிகள் மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து சைகையால் ஒரு பொருளை கொண்டுவரச்சொன்னார்கள். உடனே அவரும் ஒரு வெள்ளிப் பேழையில் அந்தப்பொருளைக் கொண்டுவந்து ஸ்வாமிகள்முன் வைத்தார். ஸ்வாமிகள் நீதியரசரைப் பார்த்து இந்தப்பேழையில் சந்தனம் இருக்கிறது இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள் என்றார்.மேலும் கூறினார் நம் இருமதத்தினருக்கும் பொதுவான அம்சம் இது. உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு உண்டு எங்கள் கோவில்களிலும் சந்தனம் உண்டு. நீதியரசரும் சந்தோஷத்துடன் அதை அணிந்து கொண்டு சென்றார்.

December 3, 2011

Feeding the poor

December 3, 2011

Vedaranyam Incident

சேத்திரங்கள் பலவற்றுக்கும் சென்று, அங்கு உறைந்திருக்கும் இறைவனை தரிசிக்க வேண்டும்; புண்ணிய நதிகளில்- தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. மகாமகம், கும்பமேளா போன்ற புண்ணிய காலங்களில் லட்சக்கணக் கான பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவதை இன்றைக்கும் காணலாம்! புண்ணிய நதிகளில் நீராடினால்… பாவங்கள் நீங்கி, மனதுள் நிம்மதி பெருகும்!

‘கடலைக் காண்பதே விசேஷம். இதைப் பார்ப்பதே புண்ணியத்தைத் தரும்’ என்பர். ஆனால், சாதாரண நாளில், கடலில் நீராடக் கூடாது. ஆடி மற்றும் தை அமாவாசை, கிரகணம், மாசி மகம் போன்ற புண்ணிய காலங்களில் மட்டுமே கடலில் நீராடலாம். ஆனால் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் உள்ள கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்; புண்ணியம் பெறலாம்.

காஞ்சி மகா பெரியவர், தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஆடி அமாவாசை புண்ணிய காலம் நெருங்குவதையட்டி, வேதாரண்யத்தில் ஸ்நானம் செய்ய முடிவு செய்தார் பெரியவாள்! அதற்கு தக்கபடி தனது யாத்திரையை அமைத்துக் கொண்டார் ஸ்வாமிகள்.

ஸ்ரீராமபிரான், காரண-காரியம் இல்லாமல் எந்தவொரு வார்த்தையையும் பேச மாட்டார்; செயல்பட மாட்டார் என்பர். மகான்களும் அப்படித்தான்… வெட்டிப் பேச்சுகளும் வீண் செயல்களும் அவர்களிடம் இருக்காது!

யாத்திரையின்போது, வழியில் உள்ள சில ஊர்களில் முகாமிட்டுத் தங்கி, பூஜைகளை முடித்துக் கொண்டு பிறகு பயணத்தைத் தொடர்ந்தார் ஸ்வாமிகள். இப்படி ஓர் ஊரில் முகாமிட்டிருந்தபோது, அங்கு பசியால் வாடிய நிலையில், ஒருவர் வந்தார்.

அவரைக் கண்டதும் மடத்து மேனேஜரை அழைத்த ஸ்வாமிகள், ”இவருக்கு ஆகாரம் கொடு; அப்படியே நல்ல வேஷ்டி- துண்டும் கொடு” என்றார். மேனேஜரும் அப்படியே செய்தார்.

பிறகு பெரியவாளிடம் வந்து, ”தங்களின் உத்தரவுப்படி உணவும் உடையும் கொடுத்தாச்சு. அவரை அனுப்பிடலாமா?” என்று கேட்டார்.

உடனே பெரியவாள், ”மடத்துக்கு முக்கிய பிரமுகர்கள் வந்தால் அவர்களை எப்படி கவனிப்பீர்களோ… அதேபோல இவரையும் கவனியுங்கள்; ராஜோபசாரம் செய்யுங் கள்” என்றார்.

மேனேஜருக்குக் குழப்பம்! இருப்பினும் பெரியவாளின் உத்தரவுப்படி, யாத்திரையில் புதிய நபரும் உடன் வந்தார்.

தினமும் மேனேஜரிடம், ‘அவருக்கு சாதம் போட்டாயா?’, ‘அவரை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாயா?’ என்று விசாரித்துக் கொண்டே இருந்தார் ஸ்வாமிகள்.

நாட்கள் நகர்ந்தன. அந்த புதிய ஆசாமி, திடீரென மது அருந்தி விட்டு வந்தார். கடவுளைத் திட்டினார்; மடத்து ஊழியர்களைக் கண்டபடி ஏசினார்; தனக்கு உணவு மற்றும் உடை தந்து ஆதரித்த பெரியவாளையும் இஷ்டத்துக்குத் திட்டித் தீர்த்தார்.

இதைக் கண்டு பொறுமை இழந்த மேனேஜர், ஓடோடி வந்து, பெரியவாளிடம் விவரம் முழுவதும் சொன்னார். ‘இந்த ஆசாமியை அனுப்பி விடுங்கள்’ என்று வேண்டினார்.

இதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் பெரியவாள். இம்மியளவு கூட அந்த ஆசாமி மீது கோபமே வரவில்லை ஸ்வாமிகளுக்கு!

”ஸ்வாமி! அந்த ஆசாமியை அனுப்பிடட்டுமா?” என்று மீண்டும் கேட்டார் மேனேஜர். ஆனால், பெரியவாள் மறுத்துவிட்டார்.

ஆடி அமாவாசை! இந்த நாளில் காஞ்சி மகா பெரியவாள், வேதாரண்யத்தில் சமுத்திர ஸ்நானம் செய்யப் போகிறார் எனும் தகவல் அறிந்து சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேதாரண்யத்துக்கு வந்து சேர்ந்தனர்.

ஆடி அமாவாசை நாளில் கடலில் நீராடுவது புண்ணியம்; அதிலும் காஞ்சி மகானுடன் நீராடுவது பெரும் பேறு என்று எண்ணியபடி பெருங் கூட்டமாக கடற் கரைக்கு வந்திருந்தனர். வயதான மூதாட்டிகளும் ஆர்வத்துடனும் பக்தியுடனும் கரையில் காத்திருந்தனர்!

ஸ்வாமிகள் கடற்கரைக்கு வந்தார்; அவரை அனைவரும் நமஸ்கரித்தனர்; நீராடுவதற்காக கடலில் இறங்கினார் பெரியவாள்! அவரைத் தொடர்ந்து மூதாட்டிகள் உட்பட எண்ணற்ற பக்தர்கள் பலரும் தபதபவென கடலில் இறங்கினர்.

அவ்வளவுதான்! மூதாட்டிகள் சிலரை அலை இழுத்துச் செல்ல… பலரும் செய்வதறியாமல் தவித்து மருகினர்.

அப்போது… ஆரவார அலைகளைப் பொருட் படுத்தாமல் பாய்ந்து சென்று, மூதாட்டிகளை இழுத்து வந்து, கரையில் சேர்த்தார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல… பெரியவாள் உட்பட அனைவரையும் மது போதையில் ஏசினானே… அந்த ஆசாமிதான்!

இவற்றைக் கவனித்த ஸ்வாமிகள், மேனேஜரைப் பார்த்து மெள்ள புன்னகைத்தார். உடனே அவர் ஓடோடி வந்து பெரியவாளை நமஸ்கரித்தார். மகான்கள் தீர்க்கதரிசிகள்!

அவர்களது செயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

மகான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே!

December 3, 2011

Dhandam

December 3, 2011

Paramacharya on Dhanam

ஆடிட்டர் ஒருவர் தர்மகாரியங்களில் ஆர்வமாக ஈடுபடுவார். ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, சங்கர ஜெயந்தி என்று எந்த விழாவாக இருந்தாலும் அவர் முதல் ஆளாக முன்னிற்பார். ஏழை எளியவர்கள் மீது இரக்கம் கொண்டு உதவி செய்வார். அவரை ஊர்மக்கள் “பெரியவர்’ என்று தான் அழைப்பர். காஞ்சிப்பெரியவரிடத்தில் ஆடிட்டருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
ஆடிட்டரின் மூத்த மனைவி காலமானபின், பெரியவரின் ஆசியுடன் இரண்டாம் கல்யாணமும் செய்து கொண்டார். நான்கு பையன்களும் ஒரு பெண்ணுமாக ஐந்து பிள்ளைகள் இருந்தனர். பெரியவரைத் தரிசிக்க வரும்போதெல்லாம் , ஆடிட்டரைப் பார்த்து,””கர்ணன் மாதிரி எல்லாருக்கும் தானதர்மம் செய்றே!” என்று அன்போடு சொல்வார். காலம் ஓடியது. ஆடிட்டரின் பிள்ளைகளும் ஆடிட்டர்களாகவே பணியாற்றினர். பெண்ணும் ஒரு ஆடிட்டரையே திருமணம் செய்து கொண்டு செல்வச்செழிப்போடு வாழ்ந்து வந்தார். அவருக்குப் பிறந்த பையனும் ஆடிட்டர் தான்.
பெற்றோர் மறைவுக்குப்பின், பிள்ளைகள் எல்லாம் தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், அப்பா வகித்து வந்த தர்ம ஸ்தாபனப் பதவிகளில் மூத்தமகன் இருந்து வந்தார். தான தர்மம் என்று யாரும் கேட்டால், “”அது என்ன விலை? எந்த கடையில் கிடைக்கும்?” என்று கேட்கும் அளவுக்கு அவருடைய நிலை மோசமாக இருந்தது.

ஒருசமயம், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதித்ததில், “கேன்சர்’ என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு பேர் சொல்ல ஒரு பிள்ளையும் இல்லை. அவரது மனதை கவலை வாட்டியது. குடும்பத்தின் மதிப்பிற்குரிய மகானான காஞ்சிப்பெரியவரைத் தரிசித்து வருவதென்று முடிவெடுத்து காஞ்சி மடத்திற்குப் புறப்பட்டார்.

“”சுவாமி! அடியேனின் பணிவான நமஸ்காரம்! எனக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய் ரொம்ப காலமாக இருக்கு! இப்போ கேன்சரும் வாட்டி வதைக்குது! மனசாலும், உடம்பாலும் நான் படும் அவஸ்தைகளை சொல்லி முடியாது. பெரியவா நீங்க தான் எனக்கு நல்வழிகாட்டி அனுகிரஹம் பண்ணணும்!” என்று சொல்லி அழுதார்.

“”உன்னை ரொம்ப நன்னாவே எனக்குத் தெரியும்! உங்கப்பா தானதர்மங்களை கர்ணன் மாதிரி செய்து வந்தார். அதனால் ஜனங்களெல்லாம் “பெரியவர்’ என்று அவரை மதிப்போடு கூப்பிடுவாங்க. விதியை யாராலும் மாத்தி எழுத முடியாது.
கிணத்திலே தண்ணீர் இருக்கு! ஆனால், அது தண்ணீரை தன்னுடையது என்று சொல்லி சொந்தம் கொண்டாடுவதில்லை! மரத்திலே பூக்கள் அடுக்கடுக்கா பூத்துக் குலுங்குது! ஆனால், பூவெல்லாம் எனக்குத்தான் என்று மரம் ஆர்ப்பரிப்பதில்லை! பசு பால் தருகிறது. பால் முழுவதும் தனக்கு தான் என்று பசு உரிமை பாராட்டுவதில்லை! உனக்கும் பட்டம் பதவிகள் இருக்கிறது. ஆனால், அந்த பதவியின் பயனாக நாலுபேருக்கு நீ நல்லது செய்யவில்லை. அதனால் தான் இந்த வேண்டாத கஷ்டமெல்லாம் உனக்கு வந்துவிட்டது. பணத்தோடு மனுஷனுக்கு குணமும் மிக அவசியம். உங்கிட்ட இருக்கும் பணத்துக்கு நீ டிரஸ்டி மட்டும் தான். சொந்தக்காரன் இல்லை என்பதை புரிந்து கொள்,” என்று அவரது மனதில் பதியும்படி எடுத்துச் சொன்னார்.

அந்த ஆடிட்டர், தான் நடத்தி வந்த வாழ்க்கை முறையை எண்ணி வருந்தியதோடு இனிமேல் தந்தையைப் போல தானதர்மங்களை செய்து வாழ்வது என்ற முடிவுடன் அங்கிருந்து கிளம்பினார்.

December 3, 2011

Chandramouli

பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மகா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது, ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.

ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிட்சை அளித்து வழிபடுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக் கொண்டனர்.

மறு நாள் காலை. ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.

அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், ”சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே? ஒரு நாளைக்கி உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ? வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.

உடனே என் தந்தையார், ”நானும் அத கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக் கிழமையே வெச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும்?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.

காரியஸ்தர் சிரித்தபடியே, ”சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர்ற செலவு. எல்லாம் முடிஞ்சு, ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை)… அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு புடிக்கும்! உங்க ஊர்ல வசூல் ஆயிடுமோல்லியோ?” என்று கேட்டார்.

சற்றும் தயங்காமல், ”பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், ”அது சரி… மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார்.

”ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார்.

சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.

”பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்கிரகித்த ஸ்வாமிகள், ”ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ?” என்று வினவினார்.

உடனே என் தகப்பனார் குரலை தாழ்த்தி, ”மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரகிக்கணும்” என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.

ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் 30 வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. 400 ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும்

ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக, மொத்த வசூல் 500 ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.

இனி, பெரியவாளின் பாத சமர்ப்பணைக் குத்தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு அவர், சரியாகவே தூங்கவில்லை.

வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில்- கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள், சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கை கூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணை ஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம்?!’ என்கிற கவலை அவருக்கு.

திடீரென்று ஒரு கருணைக் குரல்: ”சந்தானம்! கிட்ட வாயேன்… ஏன், அங்கேயே நின்னுண்டிருக்கே?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.

”என்ன சந்தானம்… நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியோ?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. ஞாயித்துக் கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோ… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், ”அது சரி சந்தானம்… லௌகிகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.

அவர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல, ”ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கறபடியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார்.

திடீரென, ”ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார். ‘காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார்?’ என்று அனைவரும் குழம்பினர்.

”போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார்.

பெரியவா விடவில்லை: ”அது சரி! நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே?”

”ஒரு வாரம் முன்னாடி பெரியவா!”- என் தகப்பனார் பதில் சொன்னார்.

”அதிருக்கட்டும்… இப்ப ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ?” – இது பெரியவா.

உடனே அருகிலிருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, ”இன்னிக்குக் காத்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.

ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. ”சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியானு எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, ”சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளக்கி விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதானு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறிவிட்டு, ‘விசுக்’கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்!

‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவதற் காகத்தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேட்கிறார் போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.

சனிக்கிழமை! பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும் தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: ”நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்லதான் ஜலம் போறது! பெரியவாகிட்ட போய் சொல்லணும்.”

தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார் என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, ”சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ… புண்ணியமுண்டு!” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர், ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!

சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தட்சணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.

அவர் சொல்ல ஆரம்பித்தார்: ”எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர்தான். அப்பா வழி தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருத்துவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்கே ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட் டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திரமௌலீஸ்வர ஸ்வாமிதான் எங்க குலதெய்வம். ‘நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா’னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்குக் கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர், ”ஆமா சாஸ்திரிகளே! ரயிலை விட்டு எறங்கி வர்றச்சே பார்த்தேன். நிறையப் பேர் மடிசாரும் பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித் தார். அவருக்கு பரம சந்தோஷம்.

”கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்மூர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்ப்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோ” என்ற படி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் 500 ரூபாய்!

”நான் போயிட்டு வரேன் சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், ”ஒங்க நாமதேயம் (பெயர்)?” என்று கேட்டார்.

அவர் சொன்ன பதில்: ”சந்திரமௌலீ!”

இருவரும் பிரமித்து நின்றோம்.

பின்னர், நேராக சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்துக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.

என் தகப்பனார் மடத்துக் காரியஸ்தரிடம் சென்று, ”பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதானு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், ”பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்களின் பிரமிப்பு அதிகரித்தது!

ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷாவந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக அந்த 500 ரூபாயை வைத்து சமர்ப்பித்தார்.

பழத் தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, ”என்ன சந்தானம்! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்.

December 3, 2011

Adinam

ஒருமுறை சென்னையில் ஹிந்துமத மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் எல்லா மடத்தலைவர்களும் ஆதீனங்களும் கலந்து கொள்வதாய் ஏற்பாடு.முதல்நாள் அந்த மாநாட்டுக்கு மஹாஸ்வாமிகளை தலைமை தாங்கும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஸ்வாமிகளும் சரி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்

.இதற்கிடையில் அன்று இரவு மற்ற மாடதிபதிகளும் ஆதீனங்களும் வேறுமாதிரி முடிவெடுத்தனர். அந்தமாநாட்டுக்க்கு ஸ்வாமிகளை தலைமைதாங்கவிடக்கூடாது என்று முடிவாகி ஒரு ஆதீனத்தை தலைமை தாங்க வைப்பது என்று முடிவெடுத்துவிட்டனர். இது விஷயம் ஸ்வாமிகள் காதுக்கு எட்டியது. பக்தர்கள் அந்த மாநாட்டுக்கு ஸ்வாமிகளைப் போகவேண்டாம் என்று தடுத்தனர்.ஆனால் ஸ்வாமிகளோ வாக்களித்தபடி போகத்தான் வேண்டும் கூறி மறுநாள் காலை மாநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பக்தர்கள் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் அபசாரம் நிகழ்ந்து விடக் கூடாதே என்று மனம் பதைபதைக்க அவருடன் சென்றனர்.
மாநாடு துவங்கியதும் முதல் பணி தலைவரை தேர்ந்தெடுப்பது. அமைப்பாளர் கூட்டத்தில் பங்கு கொள்ள வந்திருந்தவர்களைப் பார்த்து மாநாட்டு தலைவரை முன்மொழியச் சொன்னார். அரங்கத்தில் அமைதி குடிகொண்டது. ஒருவர் எழுந்து ………ஆதீனத்தின் பெயரை மாநாட்டுத் தலைவராக நான் முன் மொழிகிறேன் என்றார். உடனே கொஞ்சம் சலசலப்பு மாநாட்டின் பந்தலில்.

ஆனால் அதை அடக்கும் வண்ணம் “‘நான் அதை ஆமோதிக்கிறேன்” என்று ஒரு மெல்லிய குரல் அவையிலிருந்து எழுந்தது. குரல் வந்த திசையை எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். ஆம் அது “‘தெய்வத்தின் குரல்தான்” மஹா பெரியவரே அதை ஆமோதித்து அந்த சிக்கலான விஷயத்தை லகுவாக சமாளித்து விட்டார் ,பட்டம் பதவி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மஹான்.

December 3, 2011

Azhukku Swamy