Posts tagged ‘Chaarukesi’

December 1, 2011

With DK

பெரியவா சென்னை வந்தபோது நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்றை விவரிக்கிறார் லக்ஷ்மிநாராயணன்.

”பெரியவாளை மெட்ராஸூக்கு வரும்படி ‘ஹிந்து’ பத்திரிகை ஆசிரியர் ஜி.கஸ்தூரி அழைச்சார். ‘நான் எதுக்கு மெட்ராஸ் வரணும்?’னு கேட்டார் பெரியவா.

”இல்லே… நீங்கள் மெட்ராஸ் வந்து ரொம்ப நாள் ஆறது. அங்கே பெரியவாளோட பாதம் படணும்னு நான் விரும்பறேன்!’னு வற்புறுத்திச் சொன்னார் கஸ்தூரி.

அவர் அழைப்பின்பேரில், பெரியவா சென்னைக்கு வந்தார். கிண்டிதான் நகர எல்லை. அங்கே ‘கல்கி’ சதாசிவம், ‘சுதேசமித்ரன்’ சீனிவாசன் எல்லோரும் வாழை மரம் கட்டி, பூர்ண கும்பம் எல்லாம் தயாராக வைத்துக்கொண்டு, பெரியவாளை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தார்கள். பெரியவா வந்ததும், வழக்கமான மரியாதை எல்லாம் பண்ணி, வாண வேடிக்கை எல்லாம் நடத்தி, ஊர்வலமாக அழைத்துக்கொண்டு போனார்கள்.

அப்போ ‘ஹிந்து’ ஆபீசுக்கும் பெரியவா வரவேணும்னு கஸ்தூரி கேட்டுக்கொண்டார். பெரியவாளும் ‘ஹிந்து’ ஆபீஸ் போய், எல்லா டிபார்ட்மென்ட்டிலேயும் வேலை செய்கிறவர்களை எல்லாம் பார்த்துப் பேசி, ஆசீர்வாதம் பண்ணினார். அவாளுக்கெல்லாம் ரொம்பச் சந்தோஷம். அப்புறம் ‘சுதேசமித்ரன்’ ஆபீசுக்கும் வரணும்னு சீனிவாசன் கேட்டுக் கொண்டார். அங்கேயும் பெரியவா போனார். ‘கல்கி’ ஆபீசுக்கும் பெரியவரைச் சதாசிவம் அழைத்துக்கொண்டு போனார்.

அந்த நேரத்துலதான் ஒரு நாள், மயிலாப்பூருக்கு ஊர்வலமா பரிவாரத்துடன் பெரியவா நடந்து போனார். ஜனங்கள் கூட்டமா திரண்டு, அவர் பின்னாலேயே வந்துகொண்டு இருந்தார்கள்.

அப்போ, மாங்கொல்லையில் திராவிடர் கழகக் கூட்டம் நடக்கிறதாக இருந்தது. கழகத் தொண்டர்கள் எல்லாரும் கூடியிருந்தார்கள். பெரியார் வருவதற்காக அவர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள்.

இங்கே பெரியவாளோடு வந்து கொண்டிருந்தவர்களுக்குக் கொஞ்சம் பயம் பிடித்துக் கொண்டுவிட்டது. திராவிடக் கழகத் தொண்டர்கள் ஏதாவது ஆவேசமாகப் பேசி, விவகாரமாக நடந்துகொண்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டார்கள்.

பெரியார் ஈ.வே.ரா. அதற்குள் அங்கே வந்து சேர்ந்துவிட்டார். ”என்ன விஷயம்? ஏன் எல்லாரும் பதற்றமாக இருக்கிறீர்கள்?” என்று தன் கழகத் தொண்டர்களிடம் விசாரித்தார்.

”காஞ்சி சங்கராச்சார்யர் ஊர்வலமாக வந்துகொண்டிருக்கிறார். அவருக்குக் கறுப்புக்கொடி காட்டணும்னு தொண்டர்கள் எல்லாரும் சொல்கிறார்கள். உங்கள் அனுமதிக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்!” என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

”என்னது… கறுப்புக்கொடியா! அதெல்லாம் ஒண்ணும் கூடாது. சங்கராச்சார்யர் ஊர்வலம் முதல்ல போகட்டும். யாரும் எதுவும் இடைஞ்சல் செய்யக்கூடாது. அவரைத் தடுக்கவோ, கறுப்புக்கொடி காட்டவோ கூடாது. உம்… முதல்ல அவரைப் போக விடுங்க!” என்று உத்தரவிட்டார் பெரியார்.

பெரியவாளோட ஊர்வலம் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல், சம்ஸ்கிருத காலேஜுக்கு வந்து சேர்ந்தது. ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

பெரியவாகிட்டே இதைச் சொன்னபோது, ”எல்லாம் அந்தக் காமாட்சி பார்த்துப்பானு நான்தான் ஏற்கெனவே சொன்னேனே..!” என்று புன்னகைத்தார்.

பெரியவா அப்போதெல்லாம் ‘மேனா’வில் போவார். பல்லக்கு மாதிரி அதிக பாரமாக இல்லாமல், கனம் குறைவாக இருக்கும். நாலு பேர் அதைத் தூக்கிக்கொண்டு போவார்கள். பெரியவா அதில் ஒடுங்கி உட்கார்ந்துகொள்வார்.

ஒரு தடவை, தி.க. கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த ஒருத்தர், ‘இவர் மட்டும் பல்லக்குல போவாராம். இவரை மத்தவங்க தூக்கிட்டு போகணுமாம். ஏன், அவங்க மட்டும் மனுஷங்க இல்லையா? நடந்துபோனா என்ன இவருக்கு?’ என்று ஆவேசமாகப் பேசினார்.

பெரியவாளின் காதுக்கு இது எட்டியது. உடனே மேனாவை நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கி, நடந்து போக ஆரம்பிச்சார். ‘அவர் சொல்றதைப் பெரியவா காதுலேயே போட்டுக்க வேணாம். உங்களைச் சுமந்து போறது எங்க பாக்கியம்! மேனாவிலே ஏறுங்கோ’ன்னு அதைச் சுமக்கிற பக்தர்கள் எவ்வளவோ தயவுபண்ணிக் கேட்டுண்டும் பெரியவா மேனாவில் ஏற மறுத்துட்டார். ‘இல்லை. அவா சொல்றதும் சரிதானே! துறவிக்கு மேனா எதுக்கு?’ன்னு சொல்லி, அன்னியிலேர்ந்து ‘மேனா’வில் ஏறுவதையே தவிர்த்துவிட்டார் பெரியவா. வெயில், மழைன்னா அங்கங்கே கிடைக்கிற இடத்தில் தங்கிக்கொண்டு பிரயாணத்தைத் தொடர்வாரே தவிர, எங்கே போனாலும் சரி, எவ்வளவு தூரம் போவதாக இருந்தாலும் சரி, நடந்தேதான் போக ஆரம்பிச்சார். கடைசி வரை அந்த வைராக்கியத்தை அவர் விடவே இல்லை.

Tags:
December 1, 2011

Thenkalai Azhwar

”மகா பெரியவா தனக்கு நெருக்கமா இருக்கறவாகிட்டயும், தன்னைச் சுத்தி இருக்கறவாகிட்டேயும்தான் கருணை காட்டுவார்னு நினைச்சா, அது தப்பு. அவருக்கு எப்பவுமே ஜனங்கமேல அபரிமிதமான அன்பு உண்டு. அவங்க கஷ்டப்படறதைப் பொறுத்துக்கவே மாட்டார். அவரால அதை சகிச்சுண்டு இருக்கமுடியாது!” என்ற பீடிகையுடன், பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார் பட்டு சாஸ்திரிகள்.

”திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே, மகா பெரியவா ஒருமுறை முகாமிட்டிருந்தார்.

ஒருநாள்… திருக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும்; சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்தது. சூடுன்னா அப்படியரு சூடு!

கோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா! அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய் அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன்; பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன்.

வெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியரு சூடு! பெரியவாகிட்டே பேசிண்டிருந்த அதே நேரம், தரையோட சூடு பொறுக்கற வரைக்கும் ஒரு கால், அப்புறம் சட்டுன்னு அடுத்த கால்… இப்படியே கால்களை மாத்தி மாத்தி வெச்சு நின்னு சமாளிச்சுண்டிருந்தேன்!

மகா பெரியவா, நம்மோட மனசுல என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சுக்கற மகான். எதிர்ல நிக்கற என்னோட நிலைமை அவருக்குத் தெரியாம இருக்குமா? சட்டுன்னு பேச்சை நிறுத்தின பெரியவா, ”வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு!”ன்னார்.

விறுவிறுன்னு வெளியே வந்தேன். வாசல்ல நின்னு எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு நூத்தம்பது, இருநூறு பேர் நின்னுண்டிருந்தா. எல்லாரும் மகா பெரியவாளை தரிசிக்கிறதுக்காகத்தான் நிக்கறாங்கன்னு தோணுச்சு. பெரியவாகிட்ட வந்து விவரத்தைச் சொன்னேன்.

ஆனா மகா பெரியவாளோ, ”அவா எதுக்கு வந்திருக்கா? ஸ்வாமி தரிசனத்துக்குதானே வந்திருக்கா?! சரியா கேட்டுண்டு வா!”ன்னு மறுபடியும் என்னை அனுப்பினார்.

‘அடடா… பெரியவா சொல்றதுபோல, வெளியில நிக்கறவா எல்லாரும் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கலாம், இல்லையா? நமக்குத் தோணாம போச்சே! பெரியவாளை தரிசனம் பண்ணத்தான் வந்திருக்கானு நானாவே எப்படி நினைச்சுக்கலாம்?’ என்று யோசிச்சபடி, வாசல் பக்கம் நகர்ந்தேன்.

”அப்படியே கையோட, அவாள்லாம் வெயில்ல நிக்கறாளா, நிழல்ல நிக்கறாளானு பார்த்துண்டு வா”ன்னார் பெரியவர்.

‘நீ மட்டும்தான் கால் சூட்டோட என்கிட்ட பேசிண்டு நிக்கறதா நினைக்கறியோ?! உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கானு உனக்குத் தெரியவேணாமா?’ன்னுதான், மகா பெரியவா என்னை அனுப்பிவைச்ச மாதிரி தோணிச்சு எனக்கு.

ஜனங்க கூட்டமா நின்னுண்டிருந்த இடத்துக்கு வந்தேன். ”எல்லாரும் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கேளா… இல்ல, மகா பெரியவாளை தரிசிக்க வந்திருக்கேளா?”ன்னு கேட்டேன்.

”பெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்குறதுக்குதான் வந்திருக்கோம்”னு கோரஸா பதில் சொன்னா. ஓடி வந்து பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.

அவர் உடனே எல்லாரையும் உள்ளே அனுப்பிவைக்கச் சொன்னார். ”இங்கே மதிலோட நிழல் விழறது. எல்லாரும் அப்படியே நிழல்ல உட்கார்ந்துக்குங்கோ”ன்னார்.

வெயிலின் உக்கிரத்தைத் தாங்கமுடியாம தவிச்ச என்னோட நிலைமையைக் கவனிச்ச அதே நேரம், வெளியே ஜனங்க நின்னுட்டிருக் கிறதையும், அவங்களும் வெயில்ல கஷ்டப் படுவாங்களேங்கிறதையும் பெரியவா யோசிச்சு, அவங்களை உடனே உள்ளே அனுப்பச் சொன்னார் பாருங்கோ, அதான் பெரியவாளோட பெருங்கருணை.

இதைக் கேட்கறதுக்கு ரொம்பச் சின்ன விஷயம்போலத் தெரியலாம். ஆனா, எந்த ஒரு சின்ன விஷயத்துலேயும் நுணுக்கமான பார்வையோடு, ஜனங்க மேல மகா பெரியவா காட்டின அன்பையும் அக்கறையையும்தான் நாம இங்கே முக்கியமா கவனிக்கணும்.

கூட்டத்தோடு பேசிண்டிருந்த நேரத்துல, ”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார். பெரியவா உத்தரவு ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது உள் அர்த்தம் ஒண்ணு இருக்கும்.

நான் பிராகாரத்தை வலம் வந்தப்ப, அங்கே பிள்ளையார் சந்நிதியைப் பார்த்தேன். ஆச்சரியமும் குழப்பமுமா இருந்தது. தென்கலை நாமத்தோட காட்சி தந்தார் பிள்ளையார். பெருமாள் கோயில்ல பிள்ளையார் எப்படி? தலையைப் பிய்ச்சுண்டேன். யோசிக்க யோசிக்க, பதிலே கிடைக்கலை.

கோயிலைச் சுத்தி முடிச்சு, மகா பெரியவா எதிரே வந்து நின்னேன். என்னை ஒருகணம் உத்துப் பார்த்தார்.

”என்ன… தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ? வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்’னு சொல்லுவா!”னு விளக்கம் சொல்லிட்டுச் சிரிச்சார் பெரியவா.

Tags:
December 1, 2011

Recollections from Shri Pattabi

காஞ்சி முனிவரைப் பற்றிச் சொல்லும்போதே, அந்தப் பழைய நினைவுகளில் மூழ்கி, மெய்ம்மறந்துவிடுகிறார் பட்டாபி சார். நெகிழ்ச்சி மிகுதியில், அவரது கண்களில் தேங்கி நிற்கிறது நீர்.

”வைதீகம் கலந்த பொதுக்காரியங்களில், அவரவருக்குண்டான தர்மத்தையும் கர்ம அனுஷ்டானங்களையும் விட்டு விடாமல் கடைப்பிடிக்க வேணும்னு அடிக்கடி சொல்லுவா பெரியவா! 25, 30 வருஷத்துக்கு முன்னே, ஜீவாத்மா கைங்கர்ய சபைன்னு ஒண்ணு ஆரம்பிச்சார். அனாதை பிரேத சம்ஸ்காரம் பண்றது ரொம்ப முக்கியம்கிறது பெரியவா கருத்து. ஆஸ்பத்திரிலேருந்தும் போலீஸ்கிட்டேருந்தும் சில தருணங்கள்ல தகவல் வரும். அதுக்கு, அரசு சட்டப்படி என்ன உண்டோ அத்தனையும் செய்துட்டு, அந்த அனாதை இந்துப் பிரேதத்துக்கு, கங்கா ஜலத்தை புரோக்ஷணம் (தெளித்தல்) செஞ்சு, தகனம் பண்ண ஏற்பாடு செய்தார், பெரியவா! இது, அரசாங்கத் துக்கும் பெரிய உதவியா இருந்துது.

இந்த அமைப்புல 50-60 வாலன்டியர்ஸ் இருந்தாங்க. எல்லாரும் இளவட்டப் பசங்க. பெரியவா சொல்லிட்டா, தயக்கம் இல்லாம, எடுத்துச் செய்யறதுக்குக் காத்துட்டிருப்பாங்க எல்லாரும்! இப்பவும் இந்தக் சேவை தொடர்ந்துண்டிருக்கு. ஆனா, முன்போல வாலன்டியர்ஸ் கிடைக்கறதுதான் கஷ்டமா இருக்கு.

‘இறந்து போனவர் யாரோ… அவர் நமக்குச் சொந்தமோ பந்தமோ கிடையாது. அதுக்காக, யாரோ ஒருத்தர்தானேன்னு சும்மா இருந்துடலாமா? இந்துவா இருந்தா, முறைப்படி பிரேத சம்ஸ்காரம் செஞ்சுதானே ஆகணும்?’னு பெரியவா ஆதங்கப்படுவா. இறந்த வங்க மேலயே அப்படியரு கருணை அவருக்கு இருந்துதுன்னா, உயிரோடு இருக்கிறவா மேல பெரியவா காட்டற கருணைக்குக் கேக்கணுமா? சிறைக்கைதிகளோட குழந்தைகளுக்கு யூனி ஃபார்ம், புஸ்தகம்லாம் வாங்கிக்கொடுக்க ஏற் பாடு பண்ணினார். கைதிகளோட மனைவிமார் களுக்கு உடம்பு சரியில்லைன்னா, சிகிச்சை தரவும் ஏற்பாடு பண்ணினார். இதுக்காகவே, கும்பகோணத்துல அத்வைத சபான்னு ஒண்ணு ஆரம்பிச்சு நடத்திண்டு வந்தார்.

வாக்யார்த்த சதஸ் அங்கே அடிக்கடி நடக்கும். இதுவும் மகா பெரியவா ஆரம்பிச்சு வைச்சதுதான். இங்கே, நல்ல விஷயங்களை நுணுக்கமா ஆராய்ஞ்சு பேசுவா. பிரதோஷம், தீபாவளி, சங்கராந்தி மாதிரி நாட்கள்ல ஜெயிலுக்குப் போய், அங்கே இருக்கிற கைதிகளுக்கு நல்ல மனசு அமைஞ்சு, அவாளும் நல்லபடியா வாழணும்கற நோக்கத்தோடு, பகவானைப் பத்தி விவரிச்சு, நீதி போதனைகள் சொல்லிட்டு வருவோம்.

அதேபோல, ஆஸ்பத்திரிகளுக்குப் போய் நோயா ளிகள்கிட்ட, அவங்க விருப்பத்தோடு ராம நாமம், சிவ நாமம்லாம் சொல்லி, அட்சதை, விபூதி, குங்குமம் கொடுப்போம். இதுலேயே அவாளோட வியாதி பாதி குணமாகிடும். ‘டெர்மினல் பேஷன்ட்ஸ்’னு சொல்லுவாளே, அப்படிக் கடைசி கட்டத்துல இருக்கிற நோயாளிகளுக்குப் பக்கத்துலயே உட்கார்ந்து ஜபம் பண்ணி, பத்துச் சொட்டு கங்கா ஜலத்தை அவாளுக்குக் குடிக்கக் கொடுப்போம்.

இப்படித்தான் கேன்சர் பேஷண்ட் ஒருத்தர்… வலியால துடிச்சுண்டு இருந்தார். தினமும் அவர் பக்கத்துல உட்கார்ந்து, சிவ நாமமும் ராம நாமமும் சொல்லிண்டே இருந்தோம். ‘எனக்கு இப்ப வலியே தெரியலை; நிம்மதியாச் சாகறதுக்கு நான் தயார்’னு நெக்குருகிப் போயிட்டார். அப்புறம், அவர் இருந்த பதினைஞ்சு நாளும், வலியோ வேதனையோ இல் லாம நிம்மதியா இருந்தார். ஒரு மனுஷனோட பிராண அவஸ்தையைப் போக்கறது எவ்வளவு பெரிய தொண்டுன்னு பெரியவா மூலம்தான் தெரிஞ்சுண்டோம்.

பெரியவா பண்ணின இன்னொரு மகத்தான விஷயம், பிடி அரிசித் திட்டம். இதுல கிடைச்ச அரிசியைக் கொண்டு சமைச்சு, ரெண்டாவது மற்றும் நாலாவது ஞாயித்துக் கிழமைகள்ல, சென்னை போரூருக்குப் பக் கத்துல, கெருகம்பாக்கம் ஸ்ரீநீலகண்டேஸ்வரர் கோயில்ல கொடுத்து நைவேத்தியம் பண்ணி, எல்லாருக்கும் பிரசாதமா தந்தோம். இப்படித் தான், திருச்சி திருவானைக்காவல் அகிலாண் டேஸ்வரி கோயில்ல, ஒரு கடைசி வெள்ளிக் கிழமை அன்னிக்கி சர்க்கரைப் பொங்கல் வழங்கணும்னு ஆசைப்பட்டார் பெரியவா.

சுந்தரம்னு ஒரு அன்பர் ரொம்ப சிரத்தையா எங்ககூட சேர்ந்து சேவை பண்ணுவார். சர்க்கரைப் பொங்கலுக்கு பத்து மூட்டை அரிசி ஆகும்னா, அதுக்கு வெல்லம் எவ்வளவு தேவைப்படும்னு பாருங்கோ! நாலு பேர் உடைக்க, நாலு பேர் சமைப்பா. அதிகாலை ரெண்டு, ரெண்டரைக்கெல்லாம் சமையல் பண்ண ஆரம்பிச்சிடுவோம். வடக்கு வீதியில, நகரத்தார் சத்திரம் ஒண்ணு இருக்கு. அந்த இடத்துல, மிகப் பெரிய கோசாலை நடத்தினா பெரியவா (இப்போ, அங்கே ரிக்வேத பாடசாலை நடக்கிறது). அங்கேதான் பிரசாத விநியோகம் பண்ணுவோம். ஆடி கடைசி வெள்ளியின்போது, அன்னதானம் நடக்கும். அந்த விழாவுக்கு, வட நாட்டுக்காரா உள்பட, எல்லாரும் வந்து கலந்துப்பா.

‘வீட்டு விசேஷங்கள்ல கலந்துக்கறவா தான் லட்டு, ஜிலேபிலாம் சாப்பிடணுமா?’னு கேப்பார் பெரியவா. அதனால, அந்த அன்னதானத்துல வெறும் சாதம், குழம் புன்னு மட்டும் இல்லாம, ஸ்வீட்டும் போடு வோம். பரிமாறும்போது, ‘வேஸ்ட் பண்ணப் படாது’ன்னுதானே எல்லாரும் சொல்லு வோம்?! ஆனா, ‘எறியற மாதிரி பரி மாறுங்கோ!’ன்னு சொல்லுவார் பெரியவா.அதாவது, திருப்தியா சாப்பிட்டுட்டு, இலையில கொஞ்சம் மிச்சமே வெச்சிருக் கணும்; அந்த அளவுக்கு ஒருத்தர் வயிறு நிறையற மாதிரி பரிமாறணும்கிறது பெரி யவாளோட திருவுள்ளம்.

காஞ்சிக் கடலாடின்னு திருவண்ணா மலை மாவட்டத்துல ஒரு கிராமம். ஒரே காடா இருக்கும்; மலையும் உண்டு. பயங்கர மிருகங்கள்கூட அந்தக் காலத்துல இருந்து தாம்! அந்த ஊர்ல, பெரியவாளோட பூர்வாஸ்ரம பந்துக்கள் (உறவுகள்) இருந்தா. இப்பவும் ஒருத்தர் ரெண்டுபேர் அங்கே இருக்கா. மகா பெரியவாளுக்கு ‘தண்டம்’ பண்றதுக்கு, இங்கேருந்துதான் மூங்கில் வரும். மூங்கிலை வெட்டி, தண்ணியில அடிப்பா. அப்ப உடையாம இருந்தா, அது ஆண் மூங்கில்! ‘திக்’கா இருக்கும். பிஞ்சு மூங்கிலைத்தான் பெரியவாளுக்குத் தண்டம் செய்யறதுக்கு எடுத்துண்டு போவோம். ஏதாவது சின்னதொரு அனாசாரமாயிட்டா கூட, பெரியவா உடனே தண்டத்தை மாத்திடுவா. அதனால, அவர் எங்கே யாத்திரை போனாலும், கூடவே இருபது, இருபத்தஞ்சு தண்டங்களையும் எடுத்துண்டு போவோம்!

காஞ்சிக் கடலாடிக்குப் பக்கத்துல பர்வதமலைன்னு ஒரு இடம்; பெரிய மலை அது; கஷ்டப்பட்டு, கவனமா ஏறணும். கொஞ்சம் அசந்தா, அவ்ளோதான்! மலை மேல அழகான கோயில் ஒண்ணு இருக்கு. ஸ்வாமி பேரு, மல்லிகார்ஜுன ஸ்வாமி. அம்பாள் பேரு பிரம்மராம்பிகை. மலையைப் பிரதட்சிணமா வந்தா, எப்படியும் 36 கி.மீ. இருக்கும். பெரியவா அந்த மலையைப் பல தடவை பிரதட்சிணம் பண்ணியிருக்கார். நாங்களும் அவரோடு கூட நடந்து போயிருக்கோம்.

மார்கழி ஒண்ணாம் தேதி, அங்கே சுத்துப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவா, கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம் பேர் மலைப் பிரதட்சிணம் பண்ணுவா. பெரி யவா அதிகாலைல மூணே கால் மணிக்கெல்லாம் நடக்க ஆரம்பிச்சிடுவா. ஒருநாள்… 36 கி.மீ. தூரம் சுத்திட்டு, அசதில நாங்கள்லாம் அப்படியே தூங்கிட்டோம். ‘நீங் கள்லாம் சின்னவா; பசியைப் பொறுத்துப்பேள். இந்தக் கிராமத்து ஜனங்க பாவம்… என்னடா பண்ணுவா? குழந் தைங்களையும் தூக்கிண்டு எத்தனை பேர் நடக்கறா? அவாளுக்கெல்லாம் பசிக்காதா? குழந்தைகள் பசி தாங்குமா?’ன்னு பெரியவா எங்க சொப்பனத்துல வந்து கேக்கற மாதிரி இருந்தது. சட்டுன்னு எல்லோரும் பதறியடிச்சு எழுந்துண்டோம். அத்தனை பேருக்கும் வாய்க்கு ருசியா, ஸ்வீட்டோட அன்னதானம் பண்ற துன்னு தீர்மானம் பண்ணினோம்.

பிடி அரிசித் திட்டத்துல சேர்ற அரிசியை எல்லாம் தனியா வைச்சோம். மொத்தம் 25 மூட்டை அரிசி கிடைச்சுது. புளியஞ்சாதம் மாதிரி கிளறிப் போட அவ்ளோ அரிசி தேவை. அதே போல 15,000 ஜாங்கிரி பண்ணினோம். எல்லாத்தையும் லாரில ஏத்திண்டு போய், மூணு இடத்துல நிறுத்தி, பிரசாதமா விநியோ கிச்சோம். வருஷத்துல ஒருநாள், இப்படிப் பிரசாதம் பண்ணிக் கொடுக்கறது வழக்கம். இதெல்லாத்துக்கும் காரணம் பெரியவாளோட கருணைதான்.

மனசுல அன்பு சுரந்தால்தான், அது கருணையா பிறத்தியார்கிட்ட வெளிப்படும். பெரியவாளோட மனசு அப்படிப்பட்டது! அவர், கருணைத் தெய்வம். அவரோட கருணை மழைல நனையற பாக்கியம் நமக்குக் கிடைச் சிருந்தா, அதைவிட வேறென்ன வேணும், நமக்கு?!

Tags:
December 1, 2011

R.V Visit

”பிடில் சுந்தர சாஸ்திரிகள்ங்கிற பெரியவர் ஒருத்தர், ஆதிசங்கரரோட ஜயந்தியை ரொம்ப வருஷமா நடத்திண்டு வந்தார். மகாபெரியவா என்னைக் கூப்பிட்டு, ‘அவருக்கு ரொம்ப வயசாயிடுத்து. பாவம்… சிரமப்படறார். இனிமே நீ ஏத்துண்டு நடத்து’ன்னார். பெரியவா சொன்னபடி, கலவை கிராமத்துல சுமார் ஐம்பது வருஷமா, விடாம நடத்திண்டு வரேன். மகாபெரியவாளும் அந்த விழாவுல நிறைய முறை கலந்துண்டிருக்கா..!” – சிலிர்ப்புடன் விவரித்த பட்டு சாஸ்திரிகள், எந்த முன் அனுபவமும் இல்லாமல், பெரியவாளின் அனுக்கிரகத்தால் மட்டுமே சமாளித்து, நல்ல பேரெடுத்த சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.

”சுமார் 40, 45 வருஷங்கள் இருக்கும். பாதயாத்திரை கிளம்பின மகாபெரியவா, சோளிங்கபுரத்துல வந்து தங்கினா. அது, மிகப்பெரிய நரசிம்ம க்ஷேத்திரம். அங்கே ஆஞ்சநேயர் ஆலயமும் உண்டு. ரொம்ப விசேஷமான தலம் அது.

மகாபெரியவா அங்கு முகாமிட்டிருக்கிறதைத் தெரிஞ்சுண்ட முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன், அவர் மனைவி ஜானகி, ஆந்திர தேசத்தோட ஐ.ஜி. ராமநாதன் எல்லோரும் அங்கே வந்திருந்தா. வாலாஜாபேட்டை லேருந்து கோட்டாசெட்டி, டாக்டர் வேணுகோபால்னு எல்லாரும் மகாபெரியவாளைத் தரிசிக்க வந்துட்டா.

ஸ்ரீகண்டன்னு ஒருத்தர், மடத்தைச் சேர்ந்தவர்தான். அவர்தான் மகாபெரியவாளுக்கு பிக்ஷை பண்ணிப் போடுவது வழக்கம். அவர், பெரியவாளுக்கு மட்டும்தான் பி¬க்ஷ பண்ணுவார்; அது மட்டும்தான் அவரோட வேலை.

ஆனா, அன்னிக்கி மகாபெரியவாளுக்கு என்ன தோணித்தோ தெரியலை… என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ”என்னைப் பார்க்கணும்கிறதுக்காகச் சிரமப்பட்டு எல்லாரும் இந்த ஊருக்கு வந்திருக்கா. அவாளைப் பசியும் பட்டினியுமா இருக்கவிடலாமா? தப்பில்லையோ! நீ என்ன பண்றே, அவாளுக்கெல்லாம் உன்னால முடிஞ்சதை சமைச்சுப் போட்டுடு”ன்னார்.

அதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது. ஒரு நிமிஷம், அப்படியே பேச்சுமூச்சு இல்லாம நின்னுட்டேன். பின்னே… எனக்கு சமைக்கவே தெரியாது. ‘எனக்கு என்ன சமைக்கத் தெரியும்னு, மகாபெரியவா என்னைப் போய் சமைச்சுப்போடச் சொல்றார்?’னு தவிச்சுப்போயிட்டேன். ஆனா, அவர்கிட்டே போய், ‘எனக்குச் சமையல் தெரியாது. வேற யார் கிட்டேயாவது சொல்லுங்கோ’னு சொல்லமுடியுமா, என்ன? பத்து வயசுலேருந்து பெரியவாளைப் பார்த்துண்டிருக்கேன். யாரையும் எந்தச் சங்கடத்துலயும் மாட்டிவிடமாட்டார்னு தெரியும். அதனால அவரே இந்தக் காரியத்துக்கும் ஒத்தாசையா, பக்கபலமா இருப்பார்னு முழுசா நம்பினேன்.

சத்திரத்து மேனேஜர்கிட்டே போய், பாத்திரங்களைக் கேட்டு வாங்கிண்டு வந்தேன். அங்கே… பக்கத்துலயே இருந்த பெட்டிக் கடைல ஒரு தேங்காயும், கொஞ்சம் வெஞ்சனமும் வாங்கிண்டேன்.

அது ஒரு மலையடிவாரம். அந்த இடத்துல, அம்மிக்கல்லுக்கு எங்கே போறது? கொஞ்சம் நீட்டமா இருந்த கல்லு மேல பருப்பு, தேங்காய், மிளகாய்னு எல்லாத்தையும் சேர்த்து வெச்சு அரைச்சுத் துவையல் பண்ணினேன்.

அங்கங்கே கிடந்த கல்லைப் பொறுக்கிண்டு வந்து, அடுப்பு தயார் பண்ணிண்டேன். காஞ்ச குச்சிகளையெல்லாம் பொறுக்கி எடுத்துண்டு வந்து, அடுப்பை மூட்டி சாதம், ரசம் செஞ்சு இறக்கினேன். யாரோ அரிசி கொடுத்திருந்தா. அந்த அரிசியைக் காமிச்சு, ‘இதப் பார்… ராஜா மாதிரி இருக்கு அரிசி!’ன்னு எடுத்துக்கச் சொன்னார் பெரியவா.

ஒரு மலையின் மேல நரசிம்மர்; இன்னொரு சின்ன மலையின் மேல ஆஞ்சநேயர். ரெண்டு மலையிலேயும் ஏறி, தரிசனம் பண்ணினோம். பெரியவாளும் மலைகள் மீது ஏறி வந்து, ஸ்வாமி தரிசனம் பண்ணினார்.

கீழே இறங்கறதுக்கு மத்தியானம் ஆயிடுத்து. அவாளுக்கெல்லாம் நல்ல பசி. எல்லாரையும் உக்கார வெச்சு, சாப்பாடு பரிமாற ஏற்பாடு பண்ணினேன். வந்திருக்கிறவா எல்லாரும் பெரிய மனுஷா. தேசத்துல முக்கியப் பதவிகள்ல இருக்கறவா. இதுவரை, சமைக்கவே சமைக்காதவன் நான். என்னோட சமையல் அவாளுக்குப் பிடிக்குமோ, இல்லையோ?! பயத்தோடயே பரிமாறினேன். ஆனா, வந்தவா எல்லாரும் திருப்தியா சாப்பிட்டா. எனக்குப் பரம நிம்மதி.

‘வைதீக, சம்பிரதாய சாஸ்திரங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும். சமைக்கத் தெரியாது’ன்னு பெரியவாகிட்ட சொல்லி, கையக் கட்டிண்டு சும்மா இருந்துடலை நான். ‘இது மகாபெரியவா உத்தரவு; நமக்கு ஒண்ணும் தெரியாட்டாலும் அவர் பாத்துப்பார்’னு அசைக்க முடியாத தைரியம் உள்ளுக்குள்ளே இருந்துது. அவருடைய அனுக்கிரகம்தான், என்னைக் காப்பாத்தித்து!

சமையல் நன்னா இருந்துதுன்னும், வயிறு நிறைய, ருசிச்சுச் சாப்பிட்டதாவும் எல்லாரும் சொன்னா. உத்தரவு வாங்கிக்கறதுக்காகப் போனப்ப, பெரியவாகிட்டயும் என்னைப் பத்தி சிலாகிச்சு ஏதோ சொன்னாப்போல இருக்கு. வந்தவா எல்லாரும் போனப்புறம், பெரியவா என்னைக் கூப்பிட்டா. உள்ளூர பயமா இருந்தாலும், பெரியவா எதிர்ல போய் நின்னேன்.

”ரொம்ப நல்ல காரியம் பண்ணினே! க்ஷேமமா இருப்பே!”ன்னு கையைத் தூக்கி, ஆசீர்வாதம் பண்ணினார் மகாபெரியவா. ”அது போதும் எனக்கு! அவரோட ஆசீர்வாதம் போதும், மனசு நிறையறதுக்கு! அதைவிட வேறென்ன வேணும்?!” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் பட்டு சாஸ்திரிகள்.

Tags:
December 1, 2011

Mangadu

‘பெரியவா’ என்றால், அது காஞ்சிப் பெரியவரைத்தான் குறிக் கும். விழுப்புரத்தில் பெரியவர் இருந்த காலந்தொட்டு அவ ருடன் கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். தனது ஆறு வயது முதலே பெரியவாளுடன் நெருக்கமாகப் பழகி, அவருக்குச் சேவை புரிந்தவர். தற்போது 76 வயதாகும் இவர், பெரியவாளின் நினைவுகளை இப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கிறார். அந்தச் சிலிர்ப்பான நினைவுகளை இனி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார். மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே இவர் ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காஞ்சிப் பெரியவர் காரணமாக இருந்ததை விவரிக்கிறார் லக்ஷ்மிநாராயணன்.

அது 1952-ஆம் வருஷம்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்கக் காஞ்சிபுரம் வருவோம். அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போ, ”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா. எங்கேயோ அம்பாள் கோயில் ஒண்ணு பாழடைஞ்சு கெடக்கு. கண்டுபிடிச்சு சொல்றியா?”ன்னு எங்கிட்ட கேட்டார். ”ஒரு வாரம் டயம் கொடுங்கோ”ன்னேன்.

அடுத்த வாரம் அவரைப் பார்த்தப்போ, முதல் நாள் ராத்திரி மறுபடியும் அம்பாள் சொப்பனத்துல வந்ததா சொன்னார். அன்னிக்கு ஒரு யானை வந்து தும்பிக்கையால அவரைக் கைப்பிடிச்சு அழைச்சுண்டு போச்சு. பெரியவா அந்த யானையோடு கிளம்பிட்டா. அவருக்கு மட்டும் அது யானையா தெரி யலே. அம்பாளாத்தான் தெரிஞ்சிருக்கு.

ரொம்ப நேரம், ரொம்ப தூரம் யானை பெரியவாளை அழைச்சுண்டு போச்சு. பெரியவாளும் அது பின்னாடியே நடந்து போயிண்டே இருந்தா. பல மணி நேரத்துக்கப்புறம் ஒரு மண் ரோட்டுல யானை திரும்பித்து. அங்கே கொஞ்ச தூரம் போனதும், யானை மறைஞ்சுடுத்து. அப்படின்னா, அந்தப் பாழடைஞ்ச அம்பாள் கோவில் இங்கேதான் எங்கேயோ இருக்கணும்னு பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்து. ராத்திரி பெரியவா அங்கேயே தங்கறதா தீர்மானம் பண்ணிட்டா. அங்கே ஒரு மாட்டுக் கொட்டகை மாத்திரம்தான் இருந்துது. பெரியவா அதனுள்ளே போய்ப் படுத்துண்டுட்டா.

அந்த ஏரியாவுக்கு அப்போ மணலி ராமகிருஷ்ண முதலியார்தான் நாட்டாமை. பெரியவா வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு முதலியார் வந்து பார்த்தார். ”என்ன செய்யணுமோ, நான் செய்யறேன். பெரியவா கவலைப்படாதீங்கோ”ன்னார். ”24 மணி நேரத்துல சம்ப்ரோக்ஷணம் பண்ணணும்”னு சொன்னா பெரியவா. மளமளன்னு காரியங்கள் ஆரம்பிச்சுது. ஆளுக்கு ஆயிரம் ரூபாபோல போட்டா. புதரும், பாம்புப் புத்துகளுமா இருந்த அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினா. சின்ன கோபுரம் தெரிஞ்சுது. ”ஆதிசங்கரர் கர்ப்ப வாசம் இருந்த இடம் இதுதான்”னா பெரியவா. கர்ப்ப வாசம்னா பத்து மாசம் ஓரிடத்திலே தங்கியிருக்கறது. ”அர்த்த மேரு இங்க பிரதிஷ்டை பண்ணியிருக்கு. அம்பாள் இங்கே உக்ரமா இருக்கா; அவளுடைய உக்ரத்தைத் தணிக்கணும்”னு சொன்னா.

இதையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் போயிட்டா. இடத்தை எல்லாம் சரி பண்ணி, கும்பாபி ஷேகம் நடத்தினோம். அப்போதைக்கு ஏகாம்பர குருக்கள்னு ஒருத் தரை பூஜை பண்ண நியமனம் பண்ணினோம். மாங்காடு கோயில் பத்தி அப்பல்லாம் யாருக்கும் தெரியாது.

பக்கத்துலயே பெரியவா தனக்கொரு இடம் வேணும்னு கேட் டிருந்தா. ”ஆகட்டும். முடிச்சுத் தரேன்”னேன். ஆனா, ஏதேதோ வேலையில் அது அப்படியே தள்ளிப் போயிடுத்து. 1965-லே மறுபடியும் ஒரு தரம், ”மாங்காட்டுல இடம் வாங்கித் தரணும்னு கேட்டேனே, மறந்துட்டியா?”ன்னு ஞாபகப்படுத்தினா பெரியவா. கூடவே, ”ஒருத் தர்கிட்டேயும் கடன் கிடன் வாங்கப்படாது. உன் கைக்காசைப் போட்டு வாங்கித் தரணும்”னு நிபந்தனை போட்டா. அதனால, அது முடியாமலே இருந்தது. பெரியவா அப்பப்போ ஞாபகப்படுத்திண்டே இருப்பா. ஒருவழியா 1976-ல இந்த இடத்தை வாங்கினேன். மூணரை கிரவுண்டு நிலம். அஞ்சு லட்சம் இருந்தாத்தான் கட்ட முடியும். என்னோட வீட்டை வித்து, மனைவியின் நகைகளை வித்து எப்படியோ புரட்டிப்போட்டு வாங்கிட்டேன்.

”இங்கே ஒரு அம்பாள் கோவில் கட்டணும். முதல்ல ஆதிசங்கரர் பாதுகையை வைக்கணும். அப்புறம் மேல கட்டலாம். 16 அடி அஸ்திவாரம் தோண்டி, உள்ளே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதிப் போடணும். அஞ்சு ஜட்ஜ் வந்துதான் ஃபவுண்டேஷன் போடணும்”னார். சுத்துப்பட்டு இருக்கிற பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள்கிட்டே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதி வாங்கினோம். ஜட்ஜ் பாலசுப்பிரமணிய அய்யர்கிட்ட ஃபவுண்டேஷனுக்குப் பெரியவாளே சொல்லிட்டா. அவர் ஆக்ஞை பண்ணினா, உடனே எடுத்துச் செய்யறதுக்குப் பெரிய மனுஷாள்ளாம் காத்திருந்தா.

1982-ஆம் வருஷம்… குரோம்பேட்டைல ஒரு சின்ன இடம் வாங்கி வீடு கட்டிண்டு போயிட்டேன். அப்போ நான் சிம்ஸன்லே அக்கவுன்ட்ஸ் செக்ஷன்லே வேலை பார்த் துண்டு இருந்தேன். வேலை முடிஞ்சதும், நேரே இங்கே வந்து கட்டட வேலைகளைக் கவனிச்சுட்டு, ராத்திரி குரோம்பேட்டை போயிடுவேன்.

வேலை இழுத்துண்டே போய், 1992-லதான் முடிஞ்சுது. இந்தக் கோவிலுக்குப் பெரியவா கையாலதான் கும்பாபிஷேகம் பண்ணணும்னு எனக்கு ஆசை. ”நான்தானே எல்லாம் பண்ணி வெச்சேன். இதுக்கும் ஏன் என்னையே கூப்பிடறே? ஜெயேந்திரரைக் கூப்பிட்டுக்கோ. கும்பாபிஷேகம் பண்ற காலம், குரு வாரமும் பஞ்சமியும் சேர்ந்து இருக்கணும்”னா. பெரியவாளோட நட்சத்திரம் அனுஷம்கிறதால, அனுஷமும் சேர்ந்திருந்தா நன்னாருக்கும்னார் ஜெயேந்திரர்.

1994 ஜனவரி 8-ஆம் தேதி… 12 மணிக்கு எனக்குத் திடீர்னு கடுமையான ஜுரம்! என் குடும்பத்தார் என்னை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டாங்க. ”உங்களுக்குக் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்திருக்கு”ன்னார் டாக்டர். மூணு நாள் ஐசியு-ல இருந்தேன். நாலாம் நாள், டாக்டர்களே ஆச்சரியப்படும்படியா நான் குணமாகிட்டேன். ”உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடறோம். இருந்தாலும், 45 நாளைக்கு எங்கேயும் டிராவல் பண்ணவேண்டாம்”ன்னார் டாக்டர். பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்துது… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த அன்னிக்குதான் பெரியவா முக்தி அடைஞ்சுட்டாங்கிற விஷயம்.

அப்புறம், விஜயேந்திரர்தான் வந்து இங்கே கும்பாபிஷேகம் பண்ணி வெச்சார்.

”இந்த இடத்திலே யஜுர் வேத பாடசாலை ஆரம்பிச்சு நடத்து”ன்னு சொல்லியிருந்தா பெரியவா. அதன் படி ஆரம்பிச்சு நடத்தினேன். முதல்லே ஆறு பேர் வெளியூர்ல இருந்து வந்தா. அப்புறம் பத்தாச்சு; பன்னிரண்டாச்சு. அப்புறம் வேதம் கத்துக்க வரவாளோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுத்து.ஒண்ணரை வருஷமா யாரும் வரதில்லே. எனக்கு இது பெரிய குறை. பெரியவா ஆசைப்படி கட்டின கோயில் இது. வேத பாடசாலையும் அவர் உத்தரவின் பேரில் ஆரம்பிச்சதுதான். இது தொடர்ந்து நன்னா நடக்கணும் கிறதுதான் என் ஆசை!”

- சொல்லும்போதே லக்ஷ்மிநாரா யணனின் குரலில் ஒரு தழுதழுப்பு!

Tags:
December 1, 2011

How Periyava chose Orikkai?

 

கா பெரியவாளின் அளவற்ற அன்புக்குப் பாத்திரமானவர் எனப் பிரதோஷம் மாமாவைச் சொல்வார்கள், எல்லோரும்! ஓரிருக்கையில், காஞ்சி மகானின் மணிமண்டபம் அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், அவர். பிரதோஷம் மாமா குறித்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார், பெரியவாளின் பக்தர்களில் ஒருவரான அகிலா கார்த்திகேயன்.”அதிகாலை நான்கு மணி தரிசனத்தின்போது ஒருநாள், பிரதோஷம் மாமாவை அருகில் அழைத்த மகாபெரியவாள், ‘உனக்கு மாணிக்கவாசகர் பாடின திருவாசகம்- கோயில் திருப்பதிகத்துல வரிகள் ஏதாவது தெரியுமோ?’ என்று கேட்டார். பிறகு பெரியவாளே, ‘தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா ஆர்கொலோ சதுரர்-னு பாடியிருக்கார். எங்கே, நீ அதைத் திருப்பிச் சொல்லு!’ என்றார்.

அப்படியே பிரதோஷம் மாமா சொல்ல, மகா பெரியவாளும் அதைத் தொடர்ந்து சொல்ல… ஏதோ மந்திர உச்சாடனம்போல், ‘தந்தது உன் தன்னை, கொண்டது என்தன்னை’ என மாற்றி மாற்றி இருவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர். நிசப்தமான அதிகாலை வேளையில், இப்படிப் பெரியவாளும் பிரதோஷம் மாமாவும் சொல்வதைக் கேட்டு அனைவரும் அதிசயித்துப் போனார்கள். ‘இப்படியரு பாக்கியம் எவருக்குக் கிடைக்கும்?’ எனத் திளைத்தார் பிரதோஷம் மாமா. நிமிட நேரத்தில், கரகரவென வழிந்தது கண்ணீர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த பிறகு, அடுத்தடுத்துத் தொடர்ந்தன ஆச்சரியங்கள்!

கடம் வித்வான் விநாயக்ராம், அவரின் சகோதரர் சுபாஷ் சந்திரன், வயலின் கலைஞர்கள் கணேஷ்- குமரேஷ் போன்ற பக்தர்கள் பலரும் பிரதோஷம் மாமாவிடம் பேசும்போது, அவர் கட்டளை போலவோ, அறிவுறுத்துவது போலவோ ஏதேனும் சொல்வதைக் கேட்டனர். அடுத்து அவர்கள் மகா பெரியவாளைத் தரிசனம் செய்கிறபோது, பிரதோஷம் மாமா ஏற்கெனவே தங்களிடம் சொல்லிய அதே வார்த்தைகளையே மகா பெரியவாளும் சொல்வதைக் கேட்டு வியந்தனர்.

இப்படித்தான் ஒருமுறை சுபாஷ் சந்திரன், கணேஷ்-குமரேஷை அழைத்துக்கொண்டு பிரதோஷம் மாமாவின் இல்லத்துக்குச் சென்றார். சாந்நித்யம் நிறைந்த புனிதமான இடம் அது. வயலின் கலைஞர்கள் இரண்டு பேரும் அங்கேயிருந்த பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன்னே பவ்யமாக அமர்ந்து இசைத்தனர். பிறகு மாமாவை நமஸ்கரித்து, ‘உங்கள் கையால் தங்கக் காசு கிடைத்தால், அது எங்களுக்குப் பொக்கிஷம்’ என வேண்டினர். உடனே மாமாவும், ‘அதற்கென்ன குழந்தைகளா, அடுத்த மாசம் 23-ஆம் தேதி வாங்கோ; கட்டாயம் தரேன்!’ எனச் சொல்லி அவர்களை வாழ்த்தினார்.

அதன்படி அவர்கள், அந்தக் குறிப்பிட்ட தேதியில் காஞ்சிபுரம் வந்தபோது, பிரதோஷம் மாமாவின் வீட்டுக்குச் செல்லாமல், முதலில் பெரியவாளைச் சந்திக்க மடத்துக்குச் சென்றனர். பெரியவாளைத் தரிசித்து விடைபெறும் வேளையில், அவர்களைச் சற்றே காத்திருக்கச் சொல்லிவிட்டு, மடத்துச் சிப்பந்திகளிடம் ஏதோ சொன்னார் பெரியவா.

பெரியவாளின் ஆசீர்வாதமாகவும் பிரசாதமாகவும் பழங்கள் மற்றும் சால்வைகளைப் பெறுவது பக்தர்களின் வழக்கம். ஆனால், மூங்கில் தட்டில் வெற்றிலை-பாக்கு, பழங்களுடன் அந்த முறை தங்கக் காசுகளையும் அளித்தார், காஞ்சி மகான். ஆம், பிரதோஷம் மாமா தருவதாகச் சொன்ன தேதி; அதே தங்கக் காசு! இருவரும் அதிர்ந்தனர்.

‘தந்தது உன்தன்னை; கொண்டது என்தன்னை’ என மகாபெரியவா, தன்னுள் பக்தரை ஐக்கியமாக்கிக் கொண்டுவிட்டதுபோல அமைந்தது, அந்த நிகழ்வு!

இந்த வார்த்தைகளை மேலும் மெய்ப்பிப்பது போலான இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. அது…

கையில் ஏதுமின்றி, சிவனாருக்குக் கோயில் எழுப்பப் புறப்பட்டாரே, பூசலார்நாயனார்! அதே போல், பெரியவாளுக்கு கோயில் எழுப்ப வேண்டும் எனும் ஆசை, பிரதோஷம் மாமாவுக்கு. முதலில், கோயில் கட்டுவதற்கான நிலத்தைத் தேடினார் பிரதோஷம் மாமா. நண்பர்களிடமும் இதுகுறித்துச் சொல்லி வைத்திருந்தார். இப்படி, இரண்டு பக்தர்கள் இடம் தேடிச் சென்றபோது, காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஓரிருக்கையில், பாலாற்றங் கரையில் கோயில் எழுப்பினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணினார்கள், அவர்கள்.

அன்று மாலை, பிரதோஷம் மாமா வின் வீட்டுக்குச் சென்றவர்கள், ‘பாலாற்றங்கரையில் ஓர் இடம் இருக்கு. ரம்மியமான சூழல் அங்கே நாலஞ்சு குடியானவப் பிள்ளைகள் விளையாடிண்டிருந்தாங்க. பக்கத் துலயே பாலாறு’ என்று தெரிவித்தனர். அப்போது, அந்த அறையின் மின் விளக்கு கொஞ்சம் ஒளி மங்கி, அந்த விநாடியே சட்டெனப் பிரகாசமானது. ‘இது நல்ல சகுனமா இருக்கே!’ என்று பூரித்துப்போன பிரதோஷம் மாமா, உடனே பெரியவாளைத் தரிசிக்கச் சென்றார். அப்போதைய அவரின் ஒரே பிரார்த்தனை… ‘கோயிலுக்கான நிலத்தை சூட்சுமமாக அங்கீகரிக்கணும், பெரியவா!’ என்பதுதான்.

மடத்தை அடைந்தபோது, பெரியவா விச்ராந்தியாக ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டதால், திரையிடப்பட்டிருந்தது. வருத்தமாகிப் போனார் பிரதோஷம் மாமா. அந்த வருத்தம், உள்ளே பெருங்கவலையாக மெள்ள மெள்ள வளர்ந்த நிலையில், மடத்தில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த வேதபுரி என்பவரை, அருகில் வரும்படி அழைத்தார் மகாபெரியவா. அவரும் பெரியவாளுக்கு அருகில் செல்ல, அவரிடம் பெரியவாள் பேசுவது தெளிவாகக் கேட்டது.

‘காஞ்சியிலேருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்துல, வந்தவாசி போற வழியில நான் போயிண்டிருக்கேன். அங்கே ஒரு மணல் மேடு. நாலஞ்சு குடியானவப் பிள்ளைங்க விளையாடிண்டிருந்தா. திடீர்னு இருட்டிடுத்து. அப்புறம் சட்டுனு பிரகாசமாச்சு. நான் அங்கேயே தங்கிடறேன். அங்கே ஒரு பாட்டியம்மா இருந்தா!’ என்று தாம் கண்ட கனவை பெரியவா சொல்லச் சொல்ல… சிலிர்ப்பில் உடம்பே நடுங்கிப் போனது, வெளியே இருந்து கேட்டுக்கொண்டு இருந்த பிரதோஷம் மாமாவுக்கு. எதற்காக வந்தோமோ அதற்கான சம்மதத்தை, ‘நான் அங்கேயே தங்கிடறேன்’ என்று சூட்சுமமாக பெரியவாள் அருளினால், யாருக்குத்தான் தூக்கிவாரிப் போடாது?! தன்னைத் தன்னுள் இருந்தபடி இயக்குவது, அந்தக் கருணைத் தெய்வமே என நினைத்துப் பூரித்தார் மாமா.

தனது பக்தியாலும், பெரியவாளின் அனுக்கிரகத்தாலும், 1992-ஆம் வருடம், பிரதோஷம் மாமா வாங்கிய அந்த ஆறு ஏக்கர் நிலம், மகா பெரியவாளின் மணிமண்டபமாக இப்போது மாறியிருக்கிறது. அன்பர்களின் பேருதவியாலும் கடும் உழைப்பாலும் ஓரிருக்கையில் உருவாகியுள்ள அந்த மணிமண்டபத்துக்கு, வருகிற ஜனவரி 28-ஆம் தேதி, கும்பாபிஷேகம். இந்த நன்னாளில், மணிமண்டபத்தைத் தரிசியுங்கள்; காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!

Tags:
December 1, 2011

Ellu Punnakkum Thayal Ilayum

ர்மசாஸ்திரத்தை வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட ஆன்றோர்கள், கடல் கடந்து செல்வதை சாஸ்திரம் அனுமதிக்காது என்பார்கள். காஞ்சி மகாபெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றி வந்தார். இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. குடும்ப நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியே என்றாலும், ‘சாஸ்திரத்தை மீறிவிட்டோமோ’ என்ற உறுத்தல், பக்தரை வாட்டியது. தனது மனக்கலக்கத்துக்கு மருந்தாக…  மகாபெரியவாளை அனுதினமும் தியானித்து வந்தார்!

அவருக்கு காஞ்சி மகான் திருவருள் புரிந்த சம்பவத்தை உள்ளம் உருக விவரித்தார் அகிலா கார்த்திகேயன்…

”ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசை ஆசையாகச் செய்தார். குடும்பத்தாரைப் பார்க்கப் போகிறோம் என்பதைவிட, வெகு நாட்களுக்குப் பிறகு காஞ்சி மகானைத் தரிசிக்கப் போகிறோம் என்ற குதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது.

சென்னை வந்ததும், விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து காஞ்சிபுரம் சென்றார்.

காஞ்சி மடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார் மகா பெரியவா. தரிசனத்துக்காக வந்திருந்த அடியவர்களுக்கு வியப்பு. ‘சமையல் இன்னின்ன மாதிரியெல்லாம் இருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு பெரியவா சிரத்தை எடுத்துக்கொள்கிறாரே? இதுவரை இப்படியெல்லாம் சொன்னது கிடையாதே’ என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.

இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்து சேர்ந்தார் பக்தர். மகா பெரியவாளைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங் கினார். அவரை ஆசீர்வதித்த பெரியவா, சிப்பந்திகளை அழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோ” என்றார்.

வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படி பெரியவா சொல்வது ஏன் என்று ஊழியர் களுக்குப் புரியவில்லை. ஆனால், கடல் கடந்து தன் பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிசிக்க ஓடி வந்துவிட்டான். எனில், அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத் தெரியாதா?!

வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மகா பெரியவாளுக்கு எதிரில் வந்து நின்றார். அவரை உற்றுப் பார்த்த பெரியவா, ”என்ன… உன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?”

என்றார் கருணையும் கரிசனமும் பொங்க.

அதைக் கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்து வார்த்தைகளே வரவில்லை! ‘பெரியவா… பெரியவா…’ என்று திருப்பித் திருப்பிச் சொன்னபடியே இருந்தார்; கண்களில் கரகரவென நீர் வழிந்தது!

மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மகான், ”நானே சொல்லி டறேன்!” என்று ஆரம்பித்தார்… ”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கே புறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும் எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கற வரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு சங்கல்பத்தோட விரதமா இருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப் பார்த்து, ”என்ன நான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார்.

அவ்வளவுதான்… தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்துபோனார்கள். எனில், அந்தப் பக்தரை கேட்கவும் வேணுமா… நெக்குருகி நின்றார் அவர்!

இதற்கு நடுவில் இன்னொரு சம்பவமும் நடந்தது. அந்த பக்தர் சாப்பிடச் சென்றிருந்த நேரத்தில்,   தன்னை தரிசிக்க வந்திருந்த மற்ற அன்பர்களிடம்,  ”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே வந்திருக்காரே… அவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு சொல்லுங்கோ” என்று கேட்டாராம்.

இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில், எவரிடமும் ‘இதைக் கொடு, அதைக் கொடு’ என்று எதையும் கேட்டறியாதவர் பெரியவர். ஆகவே, பதில் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள்.

இந்த வேளையில்தான்… சாப்பிட்டு முடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார் அந்த பக்தர்! அவரையும் சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன் பார்த்த மகாபெரியவா, ”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமே சொல்லலையே…” என்று கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்…

”சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண் ணாக்கையும் தையல் இலையையும் எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!” என்றார்.

அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார். ‘தெய்வத்துக்கு நிகரான காஞ்சி மகான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரே’ என்று நெகிழ்ந்தார்..ஆனால், மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்று தவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே கேட்கவும் தயக்கம்!

இதையெல்லாம் உணராமல் இருப்பாரா பெரியவா. அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர், ”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார். எங்கிட்ட இருக்கற பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படறார். ஆனா கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும் வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது. இருந்தாலும் எனக்கு என்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை நோகவிட்டுட முடியுமா?” என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்து பேசினார்.

”இப்போ அவர் வாங்கிண்டு வர எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிற பசு மாட்டுக்குக் கொடுங்கோ அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிற பாலை எனக்குக் கொடுங்கோ. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். ஏன்னா, இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கற பாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ? பசு மாட்டு வழியா வந்தா எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும். அதனால அவர் மனசுல நெனச்சபடி,  எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு. அதை நான் ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?” என்றார் விளக்கம் சொல்வது போல!

இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும் பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை, மகாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்?

Tags:
December 1, 2011

Chidambaram Visit

”எல்லா க்ஷேத்திரங்களுக்கும் பெரியவா போனாலும், சிதம்பரவாசிகளுக்கு ரொம்ப காலமாவே பெரிய குறை ஒண்ணு இருந்துது. ‘நம்ம ஊருக்கு பெரியவா வரலியே’ங்கறதுதான் அது! அந்த ஊர்மக்களோட குறையை, பெரியவா எப்படித் தீர்த்து வைச்சார் தெரியுமா?” என்று கேட்டபடியே தொடர்ந்தார் லட்சுமிநாராயணன்.

”அது 1933-ஆம் வருஷம். சிதம்பரத்துக்கு பாத யாத்திரை யைத் தொடங்கினார் பெரியவா. சிதம்பரத்துல பஞ்சாட்சர யந்திரம், அன்ன ஆகர்ஷண யந்திரம்னு ரெண்டு யந்திரங்கள் உண்டு. இந்த ரெண்டையும் பிரதிஷ்டை செஞ்சு வழிபட்டவர் ஆதிசங்கரர்.

ஆதிசங்கரரின் குரு, கோவிந்த பகவத் பாதர்; பரமகுரு கௌட பாதர். இவர், பதஞ்சலி முனிவர் கிட்ட பாடம் படிச்சவர். இந்த பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ர பாத முனிவருக்கும் சிதம்பரம் தலத்தில் நடராஜ பெருமான் திருக்காட்சி தந்ததுடன், திருநடனம் புரிந்து ஆட்கொண்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அப்பேர்ப்பட்ட சிதம்பரம் க்ஷேத்திரத்தை, பூலோக கைலாசம்னு சொல்வாங்க. அதுமட்டுமா… இந்தத் தலம், எவராலும் உண்டாக்கப்பட்டதல்ல என்பார்கள்!

சரி… பெரியவா விஷயத்துக்கு வரேன்.

சுமார் 250 வருஷத்துக்கு முன்னால, காஞ்சி சங்கர மடத்தோட ஆச்சார்யாளுக்கும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் சின்னதா சர்ச்சை உண்டாச்சு. விபூதியை நாங்க கொடுத்து, அதை ஆச்சார்யாள் வாங்கிக்கணும்னு சொன்னாங்க, சிதம்பரத்து தீட்சிதர்கள். ”தீட்சிதர்களான நாங்கள், கைலாச பரம்பரையைச் சேர்ந்தவங்க. அதனால, நாங்க கொடுக்கிற விபூதியைத்தான் எல்லாரும் வாங்கிக்கணும்!” – இது அவங்களோட வாதம்.

”சங்கர மடத்தோட ஆச்சார்யாள், ஜகத்குரு. அதனால, எதையும் கை நீட்டி வாங்கிக்கற சம்பிரதாயம் கிடையாது!” – இது சங்கர மடத்தோட கருத்து.

ஆனா, சிதம்பரம் தீட்சிதர்கள் இதுல பிடிவாதமா இருக்கவே, காஞ்சி மடத்தோட ஆச்சார்யாள் யாரும் சிதம்பரம் கோயிலுக்குப் போறதில்லை. வெளியே இருந்தபடியே தரிசனம் பண்ணிட்டு, அப்படியே அடுத்தடுத்த ஊர்களுக்குப் போயிடுவாங்க. இப்படித்தான் பல வருஷமா நடந்துக்கிட்டு வந்துது.

அப்புறம்… 1933-ஆம் வருஷம், தீட்சிதர்களுக்கு என்ன தோணித்தோ… ‘சுவாமிகள் எங்க கோயிலுக்கு வரணும்’னு ஆசைப்பட்டாங்க. ஊர் ஜனங்களும், ‘பெரியவாளை எப்படியாவது கோயிலுக்கு வரவழைச்சுடணும்’னு ஏங்கினாங்க.

தீட்சிதர்களோட வேண்டுகோள், பெரியவாகிட்ட வந்துது. பெரியவாளுக்கும், பழைய கசப்பான சம்பவத்தையெல்லாம் எல்லாரும் மறந்து, சுமுகமான உறவோட இருக்கணும்னு விருப்பம். அதனால, சிதம்பரம் கோயிலுக்கு வர்றதுக்கு சம்மதம் தெரிவிச்சார். கோபதாபங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் காஞ்சி மகான்; கருணைத் தெய்வம்!

அதன்படி, சிதம்பரத்துக்கு வந்துசேர்ந்தார் பெரியவா. விடியற்காலைல… யார்கிட்டயும் எதுவும் சொல்லாம, நேரா விறுவிறுன்னு கோயிலுக்குப் போயிட்டார்.

அங்கே… சிவகங்கை தீர்த்தக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, நித்திய அனுஷ்டானத்தையும் முடிச்சிண்டு, நேரா நடராஜர் சந்நிதிக்குப் போய் நின்னுட்டார்.

அப்பத்தான் உஷத் கால பூஜைக்குத் தயாராகிட்டிருந்தாங்க தீட்சிதர்கள். சுவாமிகளைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டுது அவர்களுக்கு! சாட்சாத் பரமேஸ்வரனே தரிசனம் தர்றதுபோல எண்ணிப் பரவசமானாங்க. பெரியவாளை இத்தனை நெருக்கத்துல பார்த்த சந்தோஷத்துல, தங்களையே மறந்துபோய் சிலையா நின்னுட்டாங்க.

அப்புறம், ஒருவழியா நிதானத்துக்கு வந்தவங்க, பூர்ண கும்ப மரியாதையெல்லாம் செஞ்சு, எந்தக் குறையும் இல்லாம பெரியவாளை நமஸ்காரம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டாங்க.

அதேநேரம்… சிதம்பரம் கோயிலுக்குள் காஞ்சிப் பெரியவா வந்திருக்கிற தகவலைக் கேள்விப்பட்டு, ஊர் ஜனங்க மொத்தமும் தபதபன்னு கோயி லுக்குள்ளே வந்துட்டாங்க. எல்லாரும் பெரியவாளை தரிசனம் பண்ணி, சிலிர்ப்பும் தவிப்புமா நிக்கறாங்க. ‘இந்தச் சம்பவம் நடக்காதா? காஞ்சி மகானை கண்ணாரப் பார்க்கற பாக்கியம் கிடைக்காதா?’ன்னு எத்தனை வருஷத்து ஏக்கம் இது! தங்களோட பிரார்த்தனை பலிச்ச சந்தோஷமும் நிறைவும் அத்தனை பேர் முகத்துலயும் தெரிஞ்சுது.

சரி… சிதம்பரத்துக்கு வந்தாச்சு; எல்லாரையும் பார்த்தாச்சுங்கறதோட பெரியவா கிளம்பிடலை. அடுத்த நாள் துவங்கி, பதினைஞ்சு நாளைக்கு, ஆயிரங்கால் மண்டபத்துல தங்கி, உபந்யாசம் பண்ணினார் பெரியவா. சிதம்பரத்து தீட்சிதர்களுக்கும் ஊர் மக்களுக்கும் பரம சந்தோஷம்!

காஞ்சி மகான், பழுத்த ஞானி. வேற யாரும் செய்யாத, சுவாமிகள் மட்டுமே செஞ்ச காரியம் இது. ‘இருநூத்தம்பது வருஷத்துல… பீடத்துல இருந்தவா யாருமே சிதம்பரம் கோயிலுக்குப் போனதில்லை. நாம மட்டும் போய், எதுனா பிரச்னையை உண்டாக்கணுமா?’ன்னெல்லாம் அவர் யோசிக்கலை. ‘செயற்கரிய செய்வோர் பெரியோர்’னு சொல்வாங்களே… அப்படித்தான் அமைஞ்சுது இந்தச் சம்பவம்!

சிதம்பரம் கோயில்ல, நடராஜ பெருமானை தரிசனம் பண்ணினப்ப, பெரியவா சங்கல்பம் ஒண்ணு செஞ்சுண்டார். அதாவது, ‘தூக்கிய திருவடி’ம்பாங்களே… அந்தக் குஞ்சிதபாதத்துக்கு நவரத்தினக் கவசம் ஒண்ணு சார்த்தணும்னு பிரார்த்தனை பண்ணிண்டார்.

அதுக்கப்புறம், சுமார் 20 வருஷம் கழிச்சு, நவரத்தினத்தாலான கவசத்தை, குஞ்சிதபாதத்துக்குச் சார்த்தி, தன் ஆசையை, பிரார்த்தனையை பூர்த்தி செஞ்சுண்டார் பெரியவா.

அன்னிக்கி என்ன நாள் தெரியுமா?

திருவாதிரை!

தீட்சிதர்களுக்கெல்லாம் மனம் கொள்ளாத பூரிப்பு; முகம் முழுக்க அப்படியரு சந்தோஷம். ஆடல்வல்லான் நடராஜபெருமானை, நவரத்தின கவசம் சாத்தின அலங்காரத்துல பார்த்துட்டு, சிதம்பரத்து மொத்த மக்களும், மெய்ம்மறந்து நின்னாங்க!” என்று உணர்ச்சிப் பொங்கத் தெரிவித்தார் லட்சுமிநாராயணன்.

Tags:
December 1, 2011

Book Release

”மகா பெரியவருக்குச் சேவை செய்த காலங்கள்தான், என் இந்த ஜென்மத்தை நிறைவு செய்ததாக எண்ணுகிறேன்” என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார் பட்டாபி சார்.

புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், காஞ்சிப் பெரியவா கலந்துகொள்ள நேரிட்டபோது என்ன நடந்தது?

பட்டாபி சாரே விளக்குகிறார்…

”மகா பெரியவா, பிட்சை பண்ற நேரம் மத்தியானம் ஒரு மணின்னாலும், அது சில தருணங்கள்ல ரெண்டு ரெண்டரைகூட ஆயிடும். அதுக்குக் குறைஞ்சு பெரியவா பிட்சை பண்ணினதா சரித்திரமே இல்லை.

பிட்சை முடிஞ்சு, அரை மணி நேரமோ முக்கால் மணி நேரமோ கழிச்சு, விச்ராந்தி பண்ணிட்டு, தரிசனம் தருவா பெரியவா!

அந்த வேளைல, தரிசனம் பண்ண வந்தவா யாரு, என்னன்னு கேட்டுப்பேன். பெரியவாகிட்ட ஒரு வழக்கம்… தரிசனத்துக்கு வந்தவாகிட்ட, மீடியேட்டர் மாதிரி ஒருத்தரை வைச்சுண்டுதான் பேசுவார். பாபு, கண்ணன் மாமா, இல்லேன்னா நான்… இப்படி யாராவது இருப்போம்.

ரொம்பவும் எளிமையானவர் பெரியவா. குழந்தை மனசு உள்ளவரும்கூட! ஆனாலும், பெரியவாளோட சாந்நித்தியத்தை மட்டுமே தெரிஞ்சவா, கொஞ்சம் பயந்த மாதிரியே பேசுவா; சொல்லவேண்டியதை சரியா சொல்ல முடியாம திணறுவா. இன்னும் சில பேர், பெரியவா என்ன சொல்றானு புரிஞ்சுக்க முடியாம மருகுவா. அவாளுக்கு உதவும்படியான பணிதான் எங்களுது!

அப்போதைய திருநெல்வேலி ஜில்லா, இலஞ்சி கிராமத்துலேருந்து 65 வயசுப் பெரியவர் ஒருத்தர் வந்தார். இரண்டு சாகுபடி பண்ற அளவுக்கு நிலபுலங்கள் இருக்கு, அவருக்கு! தமிழ் மேல அலாதிப் பிரியம்! ஆனாலும், சம்ஸ்கிருதமும் கத்துண்டாராம்! அப்படியரு இலக்கண சுத்தமா சம்ஸ்கிருத விஷயங்களையும் சொன்னார்.

பகவத் கீதை, உபநிஷத், வேதம் இந்த மூணையும் ‘பிரஸ்தான த்ரயம்’னு சொல்லுவா. ஆச்சார்யாள் இதற்கு பாஷ்யம்கூடப் பண்ணி இருக்கார். முழுக்க முழுக்க, அத்வைதக் கருத்துக்களை விவரிக்கற பாஷ்யம் அது!

அதையெல்லாம் தமிழ்ல அப்படியே கவிதையா எழுதி, புஸ்தகமா பிரிண்ட் பண்ணி எடுத்துண்டு வந்திருந்தார் அந்த திருநெல்வேலிக்காரப் பெரியவர். பெரியவாளை நமஸ்காரம் பண்ணிட்டு, ‘இந்தப் புஸ்தகத்தை ஐயாதான் வெளியிடணுமுங்க’ என்று பெரியவாளைக் காட்டிச் சொன்னார்.

உடனே பெரியவா, ‘அவரை முன்னால வரச் சொல்லுடா’ன்னார். அவரும் வந்து நின்னார். ‘ஏ.சி. பண்ணின ஹால்ல, பெரிய பெரிய மினிஸ்டர்ஸ் எல்லாரையும் கூப்புட்டுன்னா, புஸ்தகத்தை வெளியிடணும்? எங்கிட்ட என்ன இருக்கு? சொல்லுடா பட்டாபி, அவர்கிட்ட!’ன்னார்.

அதற்கு அந்தப் பெரியவர், ‘அதென்னங்க அப்படிச் சொல்லிட்டீங்க..! ஐயாகிட்டதான் எல்லாம் இருக்கு. எனக்கு ஐயா வெளியிட்டாப் போதும்’ என்றார்.

அதைக் கேட்டு பெரியவா லேசா சிரிச்சுண்டார். ‘இதை என்ன பண்ணப் போறீங்க?’ன்னு அவரையே கேட்டார்.

இப்படியரு புஸ்தகம் வெளியிட்டு, அந்தத் திருநெல்வேலிப் பெரியவர் நஷ்டப்பட்டுடக் கூடாதேங்கிற கவலை பெரியவாளுக்கு!

‘ஐயாவைப் பார்க்க வர்றவங்க வட்டத்துல… தெரிஞ்சவங்ககிட்ட கொடுக்கணும்னுதான் அச்சுப் போட்டேன்’னார் அந்தப் பெரியவர்.

ஒரு நிமிஷம் யோசிச்ச பெரியவா, ‘புஸ்தகத்துக்கு விலைன்னு ஒண்ணு வைக்க வேணாமா? பத்து ரூபானு விலை வைச்சிடுங்கோ!’ன்னார்.

திருநெல்வேலிப் பெரியவருக்கு சந்தோஷம் தாங்கலை. அப்படீன்னா, புஸ்தகத்தை பெரியவா ஏத்துண்ட மாதிரிதானேன்னு ஒரே பூரிப்பு அவருக்கு!

ஒரு புஸ்தகத்தை எடுத்துண்டு வந்து, மகாபெரியவாளோட திருப்பாதத்துல சமர்ப்பிச்சார். உடனே பெரியவா, ‘ஒரு பத்து ரூபா இருந்தா குடுடா, பட்டாபி!’ன்னார் குழந்தை மாதிரி!

அந்தக் கிராமத்துப் பெரியவர் பதறிட்டார். ‘ஐயாகிட்டேர்ந்து பணம் வாங்கறதா? அது மகா பாபம். வேணாம்… வேணாம்’னார்.

அதுக்குள்ளே பெரியவா என்னிடம், ‘உங்ககிட்டே ஏதுடா பணம்? அதுவும் உன்னண்டை போய்க் கேட்டேனே! நான்னா உனக்கே பணம் தரவேண்டியிருக்கு!’ன்னு சிரிச்சுண்டே சொன்னார். அப்ப, எதிர்ல பொள்ளாச்சி ஜெயம்னு ஒரு மாமி இருந்தா. முக்கால்வாசி நாள், அந்த மாமி, மடத்துலதான் இருப்பார்.

உடனே மாமிகிட்ட பெரியவா, ‘நான்தானே வார்த்தை கொடுத்தேன். அதைக் காப்பாத்த வேண்டாமா? ஒரு பத்து ரூபா கொடுங்கோ’ன்னார். மாமி, உடனே பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தா. பெரியவா கேட்டு, தான் கொடுப்பது எத்தனை பெரிய பாக்கியம்னு பூரிச்சுப் போயிட்டா மாமி. நான் அந்த ரூபாயை வாங்கி, பெரியவாகிட்ட கொடுக்க… பெரியவா அதைக் கிராமத்துப் பெரியவர்கிட்டத் தந்தார். அந்தப் பெரியவர், சாஷ்டாங்கமா விழுந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார். ரூபாயை வாங்கிக் கண்ல ஒத்திண்டார். அவர் முகம் முழுக்க சந்தோஷக் களை!

நெல்லைப் பெரியவர் பண்ணியிருந்தது ரொம்பப் பெரிய காரியம்; உன்னதமான செயல். அத்தனை கர்ம சிரத்தையா அதைப் பண்ணி முடிச்சதோட இல்லாம, அவ்வளவு தூரத்துலே இருக்கிற கிராமத்துலேருந்து, பெரியவாகிட்ட காண்பிச்சு ஆசீர்வாதம் வாங்கணும்னு சிரமம் பாக்காம வந்திருக்கார்!

‘ஐயாட்டதான் எல்லாம் இருக்கு’ன்னு எத்தனை தெளிவா காஞ்சி மகானை நம்பி, தேடி வந்தார்! அவர் மட்டும் அன்னிக்கி, பெரியவாளைப் பார்க்கமுடியாம போயிருந்தா, அவர் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்?!

அந்தப் பெரியவர், அத்வைத தத்துவத்தை அப்படியே பாட்டா, தமிழ்ல எழுதி புஸ்தகமா பண்ணி எடுத்துண்டு வந்தது, மகா பெரியவாளை ரொம்பவே நெகிழப் பண்ணிடுத்து. புஸ்தகத்தை இனாமா கொடுத்தா, வாங்கிக்கிறவா அதைப் படிக்காம, அலட்சியமா வைச்சுடுவானு பெரியவாளுக்குத் தோணியிருக்கணும். அதே நேரம்… கிராமத்துப் பெரியவருக்கு பண நஷ்டமும் ஆயிடக்கூடாதுன்னு பெரியவாளுக்கு அக்கறை… அதான் பெரியவா!

அப்பறம்… அந்தப் பெரியவர், காமாட்சியம்பாள் கோயிலுக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் போய், சேவிச்சுட்டு வந்தார்.

மறுநாள். மகாபெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்கிண்டு, இலஞ்சி கிராமத்துக்குக் கிளம்பிப் போகும்போது, அவர் நடையிலயும் முகத்துலயும் தெரிஞ்சது, பரிபூரணமான சந்தோஷம்!

 

Tags:
December 1, 2011

Blessings for Indra Gandhi

காஞ்சிப் பெரியவரை வந்து தரிசனம் செய்து பலனடைந்த சிலர் பற்றி நினைவு கூர்கிறார் மாங்காடு லக்ஷ்மி நாராயணன்…

”பெரியவா கும்பகோணம் பக்கத்தில் திருவிடைமருதூரில் வேத ரட்சண சமிதி சதஸ் நடத்திவிட்டு, திருவண்ணாமலை வழியாக, காஞ்சிபுரம் போகலாம் என்று அபிப்ராயப்பட்டார்.

திருவண்ணாமலைக்கு வந்துவிட்டு, கிரி பிரதட்சிணம் பண்ணாமல் போவதா என்று, காலையிலேயே தயாராகிக் கிளம்பிவிட்டார். மத்தியானம் மூன்று மணி ஆயிற்று கிரிவலம் வந்து முடிக்க.

வழியில் சில செடிகளைக் கிள்ளி, ”பாரு, இதில் ஏலக்காய் வாசனை வரதா?” என்று கேட்பார். இன்னொரு செடியைக் கிள்ளி இலையை எடுத்து, ”இதில் பார், பச்சைக் கற்பூர வாசனை வரும்!” என்று நீட்டுவார். இது மாதிரி அங்கங்கே நின்று சில குறிப்பிட்ட செடிகளின் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துக் காண்பிப்பார். ”இங்கே அந்தக் காலத்திலே நிறைய சித்தர்கள் இருந்திருக்கா. அவாளுக்குத் தங்கம் எல்லாம் பண்ற ரசவாத வித்தை தெரிஞ்சிருந்துது. ஆனா, அந்த வித்தையை எல்லாம் அந்தச் சித்தர்கள் யாருக்கும் சொல்லிவிட்டுப் போகலே!” என்று சிரித்தார் பெரியவா.

அப்புறம், திருக்கோவிலூர் வழியாக யாத்திரை பண்ணி, காஞ்சிபுரம் வந்துவிட்டோம். காஞ்சிபுரத்திலும் அதிக நாள் தங்கவில்லை. அங்கே இருந்து கலவைக்கு வந்துவிட்டோம். அங்கேதான் பெரியவாளோட பரம குருவின் அதிஷ்டானம் இருக்கிறது.

கலவை முகாம்ல ஒரு விசேஷம். இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்ற வி.ஐ.பி-க்கள் எல்லாரும் கலவையில்தான் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டுப் போனார்கள். மதுரையில் ஒரு மீட்டிங்குக்குப் போய்விட்டு, சென்னைக்கு வந்தார் இந்திராகாந்தி. ரொம்பவும் படபடப்பாக இருந்தார். ‘பெரியவாளைப் பார்த்து தரிசனம் பண்ணிவிட்டுத் தான் போவேன்’ என்று உறுதியாக இருந்தார். ‘அவர் மௌன விரதத்தில் இருக்கிறார். அவர்கிட்டே நீங்க எதுவும் பேச முடியாது. அவரும் பதில் எதுவும் சொல்ல மாட்டார்’ என்று அவரிடம் சொன்னோம்.

‘பரவாயில்லை. என் வேண்டுகோளை நான் மனதில் நினைத்துக் கொள்கிறேன். அப்படி, அவர் முன்னிலையில் நான் நினைத்துக் கொள்வதே போதும். அவர் பதில் ஏதும் சொல்ல வேண்டாம்!’ என்று கூறிவிட்டார் இந்திராகாந்தி.

அதே மாதிரிதான் நடந்தது.

ஒரு கிணற்றடியில் பெரியவா உட்கார்ந்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்கிற மாதிரி இந்திராகாந்தி வந்து எதிரே உட்கார்ந்து கொண்டார். எதுவுமே பேசவில்லை!

இந்திராகாந்தி உத்தரவு வாங்கிக்கொள்ள எழுந்தபோது, பெரியவா ஒரு ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொடுத்தார். அதை ஒரு தட்டில் வைத்து இந்திரா காந்தியிடம் கொடுத்தோம். அந்த க்ஷணத்திலிருந்தே அதை அவர் அணிந்துகொள்ளத் தொடங்கி விட்டார்.

கர்நாடகாவில் அப்போது தேர்தல் நேரம். காங்கிரஸ் மந்திரி குண்டுராவ் அடிக்கடி பெரியவாளைப் பார்க்க வருவார். தேவகௌடா, நாகண்ண கௌடா என எல்லாருக்குமே பெரியவா மேல் பக்தி உண்டு.

குண்டுராவ் வந்து, ‘பெரியவா என்னை அனுக்கிரகம் பண்ணணும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘என்னோட அனுக்கிரகம் எதுக்கு? காமாட்சி அம்மனை வேண்டிக்கோ. உன் பிரார்த்தனை பலிக்கும்!’ என்றார் பெரியவா. அதே மாதிரி, அடுத்த ஒரு மாதத்தில் எலெக்ஷனில் குண்டுராவ் ஜெயித்து, கர்நாடகாவில் முதல் மந்திரி ஆகிவிட்டார். அவர் எப்போதும் வியாழக்கிழமை அஞ்சு மணிக்குத்தான் வருவார். வந்தால் அதிகம் பேச மாட்டார். அன்றைக்கு அவர் வருகிறபோது ஒரு மூட்டை அரிசியும், ஒரு மூட்டை சர்க்கரையும் கொண்டு வந்து, பிரசாதத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

77-ல் எலெக்ஷனில் தோற்றுப் போனார் இந்திராகாந்தி. அதற்கு அடுத்த வருஷம் கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் நின்றார். அப்போது காங்கிர ஸூக்குப் பசுமாடு – கன்று சின்னம் இருந்தது. ஆனால், அது வேண்டாம்; வேறு சின்னம் வேண்டும் என்று நினைத்தார் இந்திரா.

கலவையில் அவர் பெரியவாளைச் சந்தித்தபோது, பெரியவா கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார் அல்லவா? அது அப்போது மனசில் வர, கையையே காங்கிரஸ் சின்னமாகத் தீர்மானித்துவிட்டார் இந்திரா. காங்கிரஸூக்குத் கை சின்னம் முத்திரையாகக் கிடைத்தது இப்படித்தான். சிக்மகளூரில் இந்திரா ஜெயித்துவிட்டார்.

ஒரு விசேஷத்துக்காக அகோபிலத்துக்குப் போகணும் என்று பெரியவா புறப்பட்டார். பெரியவா நடந்து வந்தாலும், மடத்துச் சிப்பந்திகள் ஒரு ஜீப்பில் சாமான்களை எல்லாம் கொண்டு வந்தார்கள்.

அகோபிலம் ஆந்திராவில் இருக்கிறது. அங்கே ஒன்பது நரசிம்ம க்ஷேத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் இருக்கும். போவதே கஷ்டம். ஒரே மூங்கில் காடாக இருக்கும். அப்படியே மூங்கிலால் பந்தல் போட்டதுபோல இருக்கும். அதில் சர்ப்பங்கள் தொங்கும். தாண்டிப் போகவே பயமாக இருக்கும். அந்தப் பக்கத்தில் துஷ்ட மிருகங்கள் எல்லாம் நிறைய நடமாடும். ஆதி சங்கர பகவத் பாதரே, தன்னைக் கொல்ல வந்த காபாலிகளை, அங்கே இருந்த நரசிம்ம சுவாமியை வேண்டிக்கொண்டு, வதம் பண்ணிய இடம் அது.

உக்ர நரசிம்மர் சந்நிதியை 6 மணிக்குக் கதவடைத்து விடுவார்கள். அதற்கப்புறம் அங்கே யாரும் வர முடியாது. பெரியவாளுக்கு அகோபிலம் போகணும் என்று தோன்றிவிட்டது. ஆனால், போகிற வழியை உத்தேசித்து எங்களுக்கெல்லாம் எப்படிப் போவது என்று பயம் வந்துவிட்டது. பெரியவாளுக்கு அந்த பயம் எல்லாம் கிடையாது. அவருடைய தபஸ் அப்படி. அவருக்கு மட்டுமல்ல, அவரோடு வருகிறவர்களுக்கும் எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக்கொள்ளும் மகா சக்தி அவரிடம் இருந்தது!” என்கிறார் லக்ஷ்மி நாராயணன்.

Tags:
December 1, 2011

Baghavatham & Sugabrahmam

”கேரளாவில் ஆஞ்ஞன் மாதவன் நம்பூதிரின்னு ஒருத்தர்; மிகப் பெரிய பண்டிதர். பாகவத உபந்யாசத்திலும் மகா விற்பன்னராகத் திகழ்ந்த மாதவன் நம்பூதிரி, மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

ஒருமுறை மாதவன் நம்பூதிரியிடம், ‘இவனுக்கு பாகவதம் வாங்கிக் கொடு’ன்னு என்னைச் சுட்டிக்காட்டிச் சொன்னார் பெரியவா.

உடனடியா செயலில் இறங்கிய மாதவன் நம்பூதிரி, பாகவத புஸ்தகம் ஒன்றை வாங்கி வந்து, மகாபெரியவாகிட்ட கொடுத்து, ‘உங்க கையாலயே கொடுத்துடுங்கோ’ன்னு சொன்னார்.

மகா பெரியவா அந்தப் புஸ்தகத்தை வாங்கி, தன் சிரசுல வைச்சுண்டார். அப்புறம், அந்தப் புஸ்தகத்தின் மேல் மாலையெல்லாம் சாத்தினார். கொஞ்ச நேரம் கழிச்சு, புஸ்தகத்தை எடுத்து, ஆசீர்வாதம் பண்ணி எங்கிட்டே கொடுத்தார்.

வாழ்க்கைல நான் முன்னேறணும்; எப்பவும் க்ஷேமமா இருக்கணும்னு எம்மேல பெரியவாளுக்கு உண்டான அக்கறை, அதுல தெரிஞ்சுது. உருகிப்போயிட்டேன். கூடவே, அவரோட ஆசி எப்பவும் என்னை வழிநடத்தும்கற மகிழ்ச்சியில், மனசே நிறைஞ்சுபோயிடுச்சு. மாதவன் நம்பூதிரிக்கு மனப்பூர்வமா நன்றி சொன்னேன்.

பாகவதம் போன்ற புண்ணிய புஸ்தகத்தை, ரிஷிகேஷ் மாதிரியான இடத்துல, கங்கைக் கரையில உட்கார்ந்து தியானம் பண்ணி, பாராயணம் செஞ்சா நல்லதுன்னு மனசுக்குப் பட்டது. அதனால, வாய்ப்பு கிடைச்சப்ப, புஸ்தகத்தை எடுத்துண்டு ரிஷிகேஷூக்குப் புறப்பட்டுப் போனேன். அங்கேயே பல நாட்கள் தங்கியிருந்து, பாராயணத்துல மனசைச் செலுத்தினேன்.

வியாசர் தன் பிள்ளையை ‘சுகா’ன்னு அழைச்சாராம். அப்போ, அங்கே இருந்த மரம், செடி- கொடி, நதிகள், மலைகள்லாம் ‘ஏன்… ஏன்…’னு கேட்டதாம். இப்படிப் படிக்கப் படிக்க, பிரமிப்பும் வியப்புமா இருந்துது பாகவதம்.

அதிகாலை மூணு மணிக்கெல்லாம் எழுந்து, சகஸ்ர காயத்ரி பண்ணிட்டு, கங்கைக் கரையோரத்துல உட்கார்ந்து பாகவத பாராயணத்துல ஈடுபடுவேன்.

அங்கே… வசிஷ்ட குகைன்னு ஒரு இடம்; ரொம்பவே அமானுஷ்யமான இடம் அது. ரிஷிகேஷ்லேருந்து சுமார் 24 கி.மீ. தொலைவுல இருக்கிற அந்த வசிஷ்ட குகைல, சிவலிங்கம் ஒண்ணை பிரதிஷ்டை செஞ்சிருக்கா.

அந்த இடத்துல, கங்கை ரொம்ப சாதுவா ஓடிண்டிருப்பா. குகை வாசல்ல, சால்வையைப் போர்த்திண்டு உட்கார்ந்து பாராயணம் செய்யறப்ப, கங்கை நதி சலனமே இல்லாம நம்ம மனசுக்குள்ளேயே ஓடற மாதிரி ஓர் அனுபவம்… ரொம்ப சிலிர்ப்பா இருக்கும்.

வியாசர், சுகரைக் கூப்பிட்டபோது, மரம், செடி-கொடில்லாம் ‘ஏன்?’னு கேட்டதுன்னு சொன்னேன் இல்லியா…

ஒருநாள், தூக்கம் கலையற நேரம்… மகா பெரியவா என் சொப்பனத்துல வந்து, ‘ஏய், நான்தான் சுகப் பிரம்மம். தாயார் கர்ப்பத்துல இருக்கறச்சயே பிரும்ம நிலையை அடைஞ்சுட்டேன். நான்தான் சுகப் பிரம்மம்!’னு சொன்னார்.

அது சொப்பனம்தானா, இல்லே நிஜமாவே பெரியவா என்னை ஆசீர்வதிக்கறதுக்காக அங்கே வந்து அப்படிச் சொன்னாரான்னு இன்னும் எனக்கு விளங்கலை. ஆனா, அந்த கங்கைக் கரையிலே யாருமே இல்லே. நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுட்டேன். கண்லேருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடியுது.

எனக்கென்னவோ வேத சத்தியமா, மகா பெரியவாதான் வந்து அப்படிச் சொன்னதுமாதிரி இப்பவும் தோணறது.

என்னோட ஏழாவது வயசுல, கும்பகோணம்- காவிரிக் கரையில, மகா பெரியவாளுக்கு பாத பூஜை பண்ணியிருக்கேன். தங்கத்தை உருக்கி வார்த்த மாதிரியான அவரோட உருவம், அன்னிக்கு எப்படி அத்தனை தேஜஸோட இருந்துதோ, அதே மாதிரி கங்கைக் கரையில என் கண்ணுக்குத் தெரிஞ்சா பெரியவா.

நான் பிரம்மசரியம் அனுசரிக்க, மகா பெரியவாளோட கடாட்சமும், ஆஞ்ஞன் மாதவன் நம்பூதிரியிடம் வாங்கி வரச் சொல்லி, மகா பெரியவா ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்த பாகவதமும்தான் உதவியா இருந்துட்டு வரது.பல க்ஷேத்திரங்கள், பல நதி தீரங்கள் போய் தரிசனம் பண்ணிண்டு வரேன். ஆனா, பெரியவாளைவிட ஒரு பெரிய, பிரத்யட்ச தெய்வம் உண்டான்னு தெரியலை எனக்கு! அதுக்காக நான் தெய்வத்தை நிந்திக்கறதா நினைக்கப்படாது. என்னைப் பொறுத்தவரை மகா பெரியவா, தெய்வத்துக்குச் சமானம்!

எத்தனையோ சிரமங்கள், எவ்வளவோ அவமானங்கள் எல்லாம் தாங்கிண்டு, சகிச்சுண்டு நான் முன்னேறி வந்திருக்கேன்னா, அதுக்குப் பெரியவாளோட ஈடு இணையற்ற கருணைதான் காரணம்.

அவரோட கருணை எனக்கு மட்டுமா கிடைச்சுது? எத்தனை எத்தனையோ பேருக்குக் கிடைச்சுது!

அதை எல்லாம் சக்தி விகடன் வாசகர்களோடு பகிர்ந்துக்கறதுல அளவு கடந்த சந்தோஷம் எனக்கு!” என்று சொல்லிவிட்டு, காஞ்சி மகானின் நினைவுகளில் மூழ்கினார் பட்டாபி.

Tags: